மலையாளச் செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகளான, ஆசியாநெட் செய்தி மற்றும் மீடியா ஒன் ஆகிய தொலைக்காட்சி சானல்களுக்கு மத்திய அரசு 48 மணி நேர தடை விதித்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மலையாளச் செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகளான, ஆசியாநெட் செய்தி மற்றும் மீடியா ஒன் ஆகிய தொலைக்காட்சி சானல்களுக்கு 48 மணி நேர தடை விதித்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. மோடி அரசாங்கத்தின் இந்தக் கடும் நடவடிக்கை ஊடகங்களின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
இவ்வாறு தடை விதித்திருப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் ஆர்எஸ்எஸ்-இன் பங்கு மற்றும் தில்லிகாவல்துறையின் செயலின்மை ஆகியவற்றைப்பற்றிக் கேள்வி கேட்பதிலும், செயல்படுவதிலும் மத்திய அரசின் தாமதம் குறித்த விமர்சனம் என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கை, மத்திய அரசாங்கத்தால் எதேச்சாதிகாரமான முறையில், ஆளும் கட்சியின் விருப்புக்கிணங்க செயல்படாத செய்தி நிறுவனங்களை நசுக்குவதற்கானமுறையில் எடுக்கப்பட்டிருப்பது நன்கு தெரிகிறது.
ஊடகங்களை நசுக்குவதற்கான முயற்சிகள், தில்லியின் நடைபெற்ற மதவெறி வன்முறைச் செயல்களை சமாளிப்பதிலும், வன்முறையைத் தூண்டிய ஆளும் கட்சித் தலைவர்களைப் பாதுகாப்பதிலும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மறைப்பதற்காக மேற்கொள்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.
(ந-நி.)