புதுதில்லி:
டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் 30 கோடி கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும் கொரோனாவை தடுக்க கூட்டாக ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பூசியின் மருத்துவப்பரிசோதனையை இந்தியாவில் நடத்தி, தடுப்பூசிகளை தயாரித்து விநியோகிக்க புனேயை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான இந்திய சீரம் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.
இந்த தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. மருந்து கட்டுப்பாடு நிறுவனம் அனுமதி அளித்ததும் வெளியீடு தொடங்கிவிடும் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவன செயல் இயக்குநர் சுரேஷ் ஜாதவ் கூறுகையில், கொரோனா தொற்றுக்கு எதிரான 5 விதமான தடுப்பூசிகளை சீரம் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. முடிவுகளின் அடிப்படையில் சரியான மருந்தின் உற்பத்தி தொடங்கப்பட்டு, தலைமை மருந்து கட்டுப்பாட்டளரின் அனுமதி கிடைத்ததும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.