tamilnadu

img

பாதுகாப்பு ஆலோசனை குழுவிலிருந்து பிரக்யா சிங் தாக்கூரை நீக்கி பாஜக நாடகம்

நாடாளுமன்றத்தில் பேசிய, பாஜக அமைச்சர்  பிரக்யா சிங் தாக்கூர், கோட்சே தேசபக்தர் என்று கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில், பிரக்யா தாக்கூரை  பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து நீக்கி மத்தியஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மாலேகான் குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் 2008-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இவர் மீதான வழக்கை போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் கைவிடுவதாக தேசிய புலனாய்வு மையம் 2015-ம் ஆண்டு தெரிவித்தது. ஆனால், விசாரணை நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. குண்டுவெடிப்புக்கு சாத்வியின் இருசக்கர வாகனமே பயன்படுத்தப்பட்டிருந்தது என்பதால், அவரை விடுவிக்க நீதிமன்றம் மறுத்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2017-ல் இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. உடல்நிலையை காரணம் காட்டி ஜாமினில் வந்த பிரக்யா மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில்  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் சிறப்புப் பாதுகாப்புக் குழு சட்டத்திருத்த மசோதாவை உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிமுகப்படுத்தி உரையாற்றினார் . இந்த சட்டத்திருத்த மசோதா குறித்த விவாதம் அவையில் நடைபெற்றது. விவாதத்தின் போது பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா காந்தியைக் கொன்றதற்கு கோட்சே சொன்ன காரணத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். அதில் ”காந்தியின் மீது 32 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்குள் வன்மம் இருந்தது. அதன் பிறகே அவரை நான் கொலை செய்தேன். காந்தி ஒரு சார்பு கொள்கையுடையவர் என்பதால்தான் நான் அவரைக் கொன்றேன்” என்று கோட்சேவே ஒத்துக்கொண்டிருப்பதாக ராசா பேசிக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய  மத்திய பிரதேச மாநில பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான  பிரக்யா தாக்கூர், ”இந்த விவாதத்தில் நீங்கள் ஒரு தேச பக்தரை எடுத்துக்காட்டாக கூற முடியாது” என்று தெரிவித்தார். மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை தேச பக்தர் என்று குறிப்பிட்ட பிரக்யா தாக்கூருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்த நிலையில், பிரக்யா தாக்கூரை, பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், தற்போது நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் பங்கேற்க தடை  உள்ளது.