tamilnadu

img

மத்திய அரசின் மேலும் ஒரு நிதி ஊக்குவிப்பு அறிவிப்பு வறுமையில் வாடும் மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் புத்துயிர் வழங்காது.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

புதுதில்லி:
மத்திய அரசு, மற்றுமொரு நிதி ஊக்குவிப்புத் தொகுப்பு அறிவித்திருக்கிறது. எனினும்அதில் பொதுச் செலவினங்கள் அதிகரிப்பு குறித்தோ அல்லது மக்களுக்கு ரொக்கப்பணம் அளிப்பது குறித்தோ எதுவும் இல்லை என்றும்  வறுமையில் வாடும் மக்களுக்கும் மந்தநிலையில் உள்ள நாட்டின் பொருளாதாரத்திற்கும் புத்துயிர் வழங்காது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்திய அரசு, முன்பு அளித்துள்ள மூன்றுநிதி ஊக்குவிப்பு தொகுப்புகளுடன் இப்போதுஒரு நிதி ஊக்குவிப்பு தொகுப்பு அறிவிப்பதாகவும் இதனையும் சேர்த்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீத அளவிற்கு நிதி ஊக்குவிப்புதொகுப்பு அளித்திருப்பதாகவும் பீற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், எதார்த்தமான நிலை என்னவென்றால், மத்திய அரசாங்கத்தின் நேரடி கூடுதல்அரசு செலவினங்களின் மொத்தம் என்பது, மொத்தஉள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.9 சதவீதம் அல்லது 3 லட்சத்து 72 ஆயிரத்து 295 கோடிரூபாய் மட்டுமேயாகும்.  இது, உலகில் உள்ள இதரபெரிய பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடுகையில், மிகமிக அற்பத்தொகையாகும். அவை தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 முதல்15 சதவீத அளவிற்கு அளித்திருக்கின்றன.இந்த அறிவிப்புகளும்கூட வெறும் ஒதுக்கீடுகள் மட்டுமே. அவை பட்ஜெட்டின் கீழ் வரும்பல தலைப்புகளின்கீழ் பிரிக்கப்பட்டு அளிக்கப்படும். அப்போது, இந்த 1.9 சதவீத அளவுஎன்பது கூட குறையும். பட்ஜெட் மதிப்பீட்டைவிடகூடுதலாக அரசாங்கம் எவ்வளவு செலவு செய்திருக்கிறது என்பது நிதியமைச்சர்   மக்களுக்குச் சொல்ல வேண்டும். அப்போதுதான் உண்மையான சித்திரம் தெரியவரும்.


வரலாற்றிலேயே முதன்முறையாக, இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவின் பொருளாதாரம் மிகமோசமான முறையில் மிகவும் ஆழமான அளவிற்கு மந்தமாக இருப்பதாக அறிவித்ததற்கு அடுத்த நாள்,  அரசின் இந்த அறிவிப்பானது பொருளாதாரத்தை மீண்டும் புதுப்பிப்பதற்கான ஒன்றாக இருப்பதில் படுதோல்வி அடைந்திருக்கிறது.இந்த அறிவிப்பும்கூட, இதற்குமுன் அறிவித்தவைகளைப் போன்றே, கடன் வசதிகள் செய்து கொடுத்திருப்பதேயாகும். இது முதலீடுகளை அதிகரித்து, அதன்மூலம் வேலைகளையும் அதிகரிக்கும் என்றும், பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நிச்சயமாக, இவ்வாறு எப்போதும் ஏற்படவாய்ப்பில்லை. இத்தகைய முதலீடுகளின் மூலம் உற்பத்தியாகும் பொருள்கள் விற்கப்பட்டாக வேண்டும். ஆனால் இந்திய சந்தையோ மேலும்மேலும் சுருங்கிக்கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் வாங்கும் திறன் மேலும் மேலும் குறைந்துகொண்டே இருக்கிறது.

நமக்குப் பெரிதும் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்புவதற்காக பொதுமுதலீடுகளைப் பெரிய அளவில் அதிகரிப்பதன் மூலமும், அதன்மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலமும், அதன் மூலம் உள்நாட்டுத் தேவைகளைப் பெரிதுபடுத்துவதன் மூலமும்மட்டும்தான் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டமுடியும்.   அரசின் இந்த நிதி ஊக்குவிப்பு தொகுப்புகள், கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய விதத்தில் அந்நிய மற்றும் உள்நாட்டு மூலதனத்தின் தேவைகளைச் சந்திக்குமேயொழிய, பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்ட முடியாது.வேலையின்மை, பசி-பஞ்சம்-பட்டினி மற்றும்விலைவாசி உயர்வு முதலானவை அதிகரித்துக்கொண்டிருப்பதன் காரணமாக, மக்களின் வறுமை மற்றும் துன்ப துயரங்கள் தொடரும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, நேரடி ரொக்கப்பணம் மற்றும்உணவுப்பொருள்கள் உடனடியாக இலவசமாகவழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை மீண்டும் வலியுறத்துகிறது.  இதனை மனிதாபிமான அடிப்படையிலும், மக்களுக்கு வாங்கும் திறனை அதிகரிக்கும் விதத்திலும் அளித்திட வேண்டும். எந்தவொரு பொருளாதாரத்திற்கும் புத்துயிரூட்டுவதற்கு இது ஒன்றே வழியாகும்.    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                       (ந.நி.)