புதுதில்லி:
மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், தனது முந்தைய செயல்களுக்காக தற்போது தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பதாக, ‘பதஞ்சலி’ கார்ப்பரேட் நிறுவன முதலாளியும், சாமியாருமான ராம்தேவ் கூறியுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள கல்லூரி ஒன்றில், ராம்தேவ் பேசியுள்ளார்.
அப்போது, “அமித் ஷாவை சிறைக்கு அனுப்பிய ப. சிதம்பரம், தானே சட்டச் சிக்கலில் சிக்குவோம் என்பதை கனவுகளில் கூட நினைத்திருக்க மாட்டார். சிதம்பரம் தனது ‘செயல்களுக்கு’ அபராதம் செலுத்துகிறார், ஏனெனில் அவர் சட்டத்தை மீறியவர்” என்று குறிப்பிட்டுள்ளார். ‘நான் நிதியமைச்சர், முழுப் பேரரசும் என்னுடையது’ என்று சிதம்பரம் நினைத்துக் கொண்டிருந்தார். இன்று அவர் தனது செயல்களின் கோபத்தை எதிர் கொள்கிறார் என்றும் கூறியுள்ள ராம்தேவ், “பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் உயிருடன் இருப்பதை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விரும்பவில்லை” என்றும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தலைநகர் புதுதில்லியிலுள்ள ராம்லீலா மைதானத்தில், அன்னாஹசாரே ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். அதில், ராம்தேவும், அவரது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். அப்போது கைதுக்குப் பயந்து,ராம்தேவ் பெண்கள் அணியும் நைட்டியை அணிந்து நள்ளிரவில் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்தது. அன்று உள்துறை அமைச்சராக இருந்தவர் சிதம்பரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.