tamilnadu

img

அனைத்து மொழிகளையும் சேர்க்கும் விதத்தில் ஆட்சிமொழிச் சட்டத்தைத் திருத்திடுக....

புதுதில்லி:
ஆட்சி புரிவதில் அரசமைப்புச்சட்டத் தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் சேர்த்திடும்விதத்தில் 1963ஆம் ஆண்டு ஆட்சி மொழிச்சட்டம்திருத்தப்படுவதை அரசாங்கம் பரிசீலனை செய்திட வேண்டும் என்றும், இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் தன்னைச் சுருக்கிக்கொள்ளக் கூடாது என்றும்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் ஏ.பாப்டே கூறியுள்ளார். 

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு இந்தியாவில் அரசமைப்புச்சட்டத்தின் எட்டாவதுஅட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் உயர்நீதிமன்றம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு, நாட்டில் உள்ள கட்டிடங்கள், நாடு முழுவதும் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு வசதிகளின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கம் முதலானவை சம்பந்தப்பட்டது. இது அனைத்து மக்கள் மத்தியிலும் எவ்விதமான பாகுபாடும் இல்லாமல் சென்றடைய வேண்டும். குறிப்பாக இந்தி பேசாத மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும். இச்சட்ட வரைவினை நாட்டுப்புற மக்களும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இதுதொடர்பாக மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்பு இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் விரும்புகிறது. அப்போதுதான், மக்கள் இதனை ஆய்வு செய்து தங்கள் ஆட்சேபணைகளைத் தெரிவிக்க முடியும்,” என்று கூறியிருந்தது.  இதனை எதிர்த்து, அரசுத்தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்தபோதே, தலைமை நீதிபதி இவ்வாறு கூறினார்.

அப்போது அவர் மேலும் கூறியதாவது:
“இப்போதெல்லாம் மொழிபெயர்ப்புப் பணி மிகவும் எளிமையானது. நாடாளுமன்றத்தில் எந்த மொழியிலும் மொழிபெயர்க்கப்படுகிறது. நாங்களும் எங்கள் தீர்ப்புகளை அனைத்து இந்தியமொழிகளிலும் மொழிபெயர்த்துக் கொண்டிருக் கிறோம்.  நீங்களும் (மத்திய அரசும்) இதற்கேற்றவிதத்தில் சட்டத்தைக் கொண்டுவர முடியும்.”“நாங்கள் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆட்சேபிக்கவில்லை,” என்று கூறிய தலைமை நீதிபதி, பின்னர் அரசாங்க வழக்கறிஞரிடம் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்ததுடன், மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மீண்டும் அங்கே மறுஆய்வு மனு பொய்த்துப்போனால் திரும்பவும் உச்சநீதிமன்றத்திற்கு வரமுடியும் என்றும் கூறினார்.   (ந.நி.)

;