tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய எதிர்ப்பு நாள் மத்தியக்குழு அலுவலகத்தின் முன் எழுச்சியுடன் நடந்தது

புதுதில்லி, ஜூன் 16-

7500 ரூபாய் ரொக்கம், பத்து கிலோ உணவு தான்யங்கள் விநியோகம், கிராமப்புற வேலைவாய்ப்புத்திட்டத்தில் 200 நாட்களுக்கு வேலை, பொதுத்துறைகளைத் தனியாரிடம் தாரை வார்த்தலை நிறுத்து ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலுக்கிணங்க நாடு முழுவதும்  அகில இந்திய எதிர்ப்பு நாள் நடைபெற்றது.

தில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகத்தின் முன்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், தபன்சென், ஹன்னன்முல்லா, மற்றும் மத்தியக்குழு உறுப்பினர்கள், முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டு எழுச்சியுடன் நடைபெற்றது.

கூட்டத்தில் வருமான வரி செலுத்தாத குடும்பத்தினர் அனைவருக்கும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்க மாற்று அளித்திட வேண்டும்,   அடுத்த ஆறு மாதங்களுக்கு 10 கிலோ உணவு தானியங்கள் ஒவ்வொரு மாதமும் இலவசமாக அளித்திட வேண்டும்,   மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தின் கீழ் 200 நாட்களுக்கு வேலை அளித்திட வேண்டும், ஊதியத்தொகையையும் உயர்த்திட வேண்டும், நகர்ப்புற ஏழைகளுக்கும் இதனை விரிவாக்கிட வேண்டும், வேலையில்லாதோருக்கு வேலையில்லா நிவாரணம் உடனடியாக அறிவித்திட வேண்டும்,   நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதை நிறுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதையும், தொழிலாளர் நலச்சட்டங்களைத் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றுவதையும் நிறுத்திட வேண்டும் எனக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நிறைவாக, சீத்தாராம் யெச்சூரி இக்கோரிக்கைகளை விளக்கி செய்தியாளர்களின் உரையாற்றினார். அப்போது மேலும் அவர் கூறியதாவது:

நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் வேலையிழந்தும், வாழ்வாதாரங்களை இழந்தும் பட்டினிக்கொடுமைக்கு ஆளாகியிருக்கக்கூடிய சூழ்நிலையில் மோடி அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்களின் வரியை உயர்த்தியிருப்பதும், தன் வருமானத்தை அதிகரித்துக்கொண்டிருப்பது, மக்களை மேலும் அவதிக்குள்ளாக்கிடும். இது  மனிதாபிமானமற்ற செயலாகும். பெட்ரோலியப் பொருட்களின் வரிவிதிப்பை மோடி அரசு விலக்கிக் கொள்ள வேண்டும். மக்களுக்கு ரொக்கம் அளிக்கப்பட வேண்டும், உணவு அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தினார்.