உங்களைப் பொறுத்த ஜே.என்.யூ (ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்) என்னவாக இருக்கிறது? இவ்வாறு போராடுவதற்கு ஜே.என்.யூவிற்கென்று மதிப்பு இருக்கிறதா? உங்கள் உயிரையே அதற்காகப் பணயம் வைத்துள்ளீர்களே…
ஜே.என்.யூ என்பது இங்குள்ள எந்தவொரு மாணவருக்கும் அவர்களின் இரண்டாவது வீடாக, பலருக்கு அவர்களின் வீடாகவே இருந்து வருகிறது. அவர்களுடைய வீடுகள் பல மாணவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு ஓர் அடையாளத்தை வழங்காததால், இந்த பல்கலைக்கழகம் அவர்களைப் பொறுத்த வரை அளப்பிற்கரிய மதிப்பு மிக்கதாக இருக்கிறது. தாங்கள் செய்ய விரும்புவதைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் ஒருபோதும் அவர்களுக்கு வீடுகளில் கிடைப்பதில்லை. அந்த சுதந்திரத்தை கல்வியுடன் சேர்த்து ஜே.என்.யூ அவர்களுக்கு வழங்கி வருகிறது. அவர்களுக்கு இது ஒரு கனவுலகாகும். இங்குள்ள சூழல் மற்றும் எங்களுடைய பேராசிரியர்கள் எங்களை வளர்க்கும் விதத்துடன் அதிக தொடர்பு கொண்டதாக அது இருக்கிறது. எனவே இதற்காகப் போராடுவது என்பது மதிப்பு மிக்கதுதான். இது குறித்து சிந்திக்கும்போதெல்லாம், அனைவரும் ஜே.என்.யூ போன்றதொரு பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இது இந்தியாவில் இருக்கின்ற இடம் இல்லை என்பதை நீங்கள் உணரலாம்.
எங்களிடம் இருக்கின்ற அமைப்பும், கலாச்சாரமும் மிகவும் அரிதானவை. இந்த நூலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பொருட்களை நீங்கள் எங்காவது வைத்துவிட்டுச் செல்லலாம். அவை எதுவும் களவு போகாது. சிலர் உங்கள் பொருட்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அவர்கள் அவற்றைத் திருப்பி வைத்து விடுவார்கள். பணப்பையிலிருந்து உங்கள் உடல் வரைக்கும் என்று அனைத்துமே ஜே.என்.யூவில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள தௌலத் ராம் கல்லூரியில் நான் படித்தேன். அங்கே படிக்கின்ற பெண்களுக்கு இரவு 7 மணிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிடும். தினந்தோறும் இரவு தாமதமாக வெளியே செல்ல நீங்கள் விரும்புவதில்லை என்றாலும் அத்தகைய ஊரடங்கு உத்தரவு வெளியே செல்ல உங்களுக்குத் தடை விதிக்கும். 2016இல் இங்கே ஜே.என்.யூவுக்கு வருவதற்கு முன்பாக இவ்வாறான பாதுகாப்பை நான் என்றுமே அனுபவித்தது இல்லை. நூலகத்திலிருந்து அதிகாலை 4 மணிக்கு நீங்கள் திரும்பினால் கூட, எதுவும் தவறாக நடந்து விடாது. ஏனென்றால் இங்கிருக்கும் அனைத்து மாணவர்களிடமும் ஒரு வகையான புரிதல் இருக்கிறது. இந்த பல்கலைக்கழகம் நேர்மைக்கு, சரியான விஷயங்களுக்கு துணை நிற்கிறது என்ற உணர்வு அனைவரிடமும் உள்ளது. அதுவே இங்கே போராடுவதற்கான மதிப்பை அளிக்கிறது.
ஜனவரி 5 வன்முறை குறித்த வீடியோவைப் பார்க்கவே பயமாக இருந்தது. நீங்கள் மிகவும் மோசமாக தாக்கப்பட்டீர்கள். அப்போது உங்கள் மனதில் என்னதோன்றியது?
அது மிகவும் பயத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது. இதுபோன்று ஏதாவது குறிப்பாக ஜே.என்.யூவில் நடக்கும் என்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தக் கும்பல் மிக அருகில் வந்தபோது, சில ஆசிரியர்களும் எங்களுடன் இருந்ததால் ஒரு பாதுகாப்பு உணர்வு எங்களிடம் இருந்தது. அதிகபட்சம் அவர்கள் கூச்சலிட மட்டுமே செய்வார்கள் என்றே நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் இதுவரையில் எங்களுக்கு ஒருபோதும் ஏற்பட்டிராத வகையில் அவர்கள் எங்களைத் தாக்கினார்கள்.
நீங்கள் ஏன் ஓடவில்லை அல்லது மறைந்து கொள்ளவில்லை? அன்றிரவு ஏராளமானவர்கள் அவ்வாறே செய்தார்கள்.
ஓடிப்போவதற்கு முன்பாகவே நான் தாக்கப்பட்டேன். என்னுடைய சகோதரி என்னுடன் இருந்தாள். அவளுக்கு இந்த வளாகத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. அன்றைக்கு அவள் என்னைப் பார்க்க வந்திருந்தாள். நாங்கள் சபர்மதியில் உட்கார்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது, திடீரென்று அது நடந்தது. பயப்பட வேண்டாம் என்று மற்ற மாணவர்களிடம் நான் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. ஆனாலும் நிலைமையைப் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே நான் தாக்கப்பட்டேன்.
உங்களுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து மருத்துவர் என்ன சொன்னார்? உங்கள் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு எந்த அளவிற்கு இருந்தது?
ஆழமான காயம் ஏற்பட்டது. அது இப்போது குணமடைந்து வருகிறது. இன்று மேலும் ஒரு சோதனை செய்ய வேண்டியுள்ளது. என் கை பலமாக முறியவில்லை. அது மிக லேசான மயிரிழை முறிவுதான். ஜனவரி 22க்குள் பிளாஸ்டரை எடுத்து விடுவார்கள் என்றே நான் நினைக்கிறேன். வலி நிவாரணி மருந்துகள் எதுவும் இப்போது எடுத்துக் கொள்ளவில்லை. தேவைப்படும்போது மட்டுமே நான் அவற்றை எடுத்துக்கொள்கிறேன்.
திரும்பி வந்து விடுமாறு உங்களிடம் கேட்க மாட்டோம் என்று உங்கள் பெற்றோர் சொல்லியிருந்தார்கள். அவர்களிடமிருந்து உங்களுக்கு பலம் கிடைக்க வேண்டும்.
இது எனது தந்தை கொண்டிருக்கும் நிலைப்பாட்டுடன் தொடர்புடையது. அவர் இடதுசாரிகளுடன் தொடர்புடையவர். அந்த தாக்கம் அவரிடமிருந்து எனக்கு வந்திருக்கிறது. எனது சொந்த ஊரிலும் நான் இவ்வாறே இருந்தேன். நான் மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகளின் கோட்டையான துர்காபூரைச் சேர்ந்தவள். ஆகவே எந்த அநீதி நடந்தாலும் போராட வேண்டும் என்ற உணர்வு எப்போதும் என்னுள் இருந்தது.
சில சமயங்களில் என் தந்தை என்னைத் திட்டியிருக்கிறார். நிச்சயமாக. சில முன்னுரிமைகள் உள்ளன. கல்வி மற்ற விஷயங்களுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்றாலும் அவர் ஒருபோதும் என்னைத் தடுத்து நிறுத்தியதில்லை. நான் ஏன் இதைச் செய்கிறேன் என்று என் அம்மாவும் சில நேரங்களில் என் மீது கோபப்படுவதுண்டு. என்னுடைய நண்பர்கள் மிகவும் வசதியான வாழ்க்கையை நடத்துகிறார்கள். வேலை செய்து வருகின்ற அவர்கள் கட்டண உயர்வு பற்றி கவலைப்பட மாட்டார்கள். நான் ஏன் இவற்றின் மீது கூடுதலாக நடவடிக்கை மேற்கொள்கிறேன் என்று அவள் கவலைப்படுகிறாள். எனக்கு நல்ல கல்விப் பின்னணி இருப்பதாகவும், நான் நன்றாகச் செயல்பட முடியும் என்றும் அவள் நினைக்கிறாள். ‘நன்றாகச் செயல்படுவது’ என்றால் என்ன என்பது குறித்தும் இங்கே விவாதம் இருக்கின்றது. வெளிப்படையாகச் சொல்வதென்றால், உயர்நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்து வருவது, பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருப்பது போன்றவையே நன்றாகச் செயல்படுவதற்கு அவசியம். என்னால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனது தந்தையும் விரைவில் ஓய்வு பெறப் போகிறார்.
துணைவேந்தரை நீக்க வேண்டுமென்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். அதிலிருந்து பின்வாங்குவதற்கு ஏதாவது வாய்ப்பு உள்ளதா?
இல்லை. துணைவேந்தரைப் பதவியில் இருந்து அகற்றாமல் குளிர்கால செமஸ்டரைத் தொடங்க கூடாது என்ற வலுவான நிலைப்பாட்டை எங்கள் ஆசிரியர்கள் சங்கமும் எடுத்துள்ளது. இந்த துணைவேந்தராலேயே மாணவர்களின் வாழ்க்கை ஆபத்தில் சிக்கியுள்ளது. ஒரு முதல் தகவல் அறிக்கையைக்கூட அவர் தாக்கல் செய்யவில்லை. பாதிக்கப்பட்ட , காயமடைந்த மாணவர்களை அவர் சந்திக்கவே இல்லை.
இவ்வாறான துணைவேந்தரைக் கொண்டிருப்பதால், பல்கலைக்கழகத்தின் கல்வி ஒழுங்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. பாதுகாப்பு குறித்த அடிப்படை உணர்வு குறைந்துள்ளது. மீண்டும் ஒரு கும்பல் நாளை வளாகத்திற்குள் வந்தால், யாரை அணுகுவது அல்லது எங்கே செல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. துணைவேந்தரிடம் சென்றாலும், ‘எனக்கு அதைப் பற்றி கவலையில்லை’ என்று அவர் கூறக்கூடும். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை.
கணினி சர்வர் அறையை நொறுக்கியதாக உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அது குறித்து உங்கள் கருத்து என்ன?
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் (JNUSU) ஒருபோதும் கணினி சர்வர் அறையை அடித்து நொறுக்க அழைப்பு விடுக்கவில்லை. சர்வர் அறை உடைக்கப்பட்டிருந்தால், எங்களுக்கு மின்னஞ்சல்கள் வந்திருக்காது. ஆனால் எங்களிடம் அந்த மின்னஞ்சல்கள் உள்ளன. வைஃபை நன்றாகவே வேலை செய்கிறது. சி.டி.வி காட்சிகளை நாங்கள் கேட்டு வருகிறோம். வயரை நான் வெட்டியதாக அவர்களின் எஃப்.ஐ.ஆர் கூறுகிறது. நான் சர்வரை உடைப்பதை அவர்கள் கண்ட காட்சிகளை எனக்குத் தர வேண்டும். இவையெல்லாம் அவர்கள் கூறுகின்ற மிகப் பெரிய பொய்கள். நான் ஒன்றும் முகமூடி அணிந்து செல்லவில்லை. என்னிடம் எந்த தடிகளும் இருக்கவில்லை. நான் எதையும் உடைப்பதைக் காட்டுகின்ற வீடியோ பதிவு எதுவும் இல்லை எனும் போது, என்னை சந்தேக த்திற்குரிய நபர் என்ற முடிவிற்கு அவர்கள் எப்படி வந்தார்கள்? சந்தேகத்திற்குரிய நபராக தேசிய தொலைக்காட்சிகளில் என் முகத்தை அவர்கள் காட்டுகிறார்கள். உண்மையான ஆதாரம் இல்லாமல் நீங்கள் யாரையும் இவ்வாறு கேவலப்படுத்த முடியாது. நாளை வளாகத்திற்கு வெளியே செல்வதே ஆபத்தானதாக இருக்கலாம். எனது பாதுகாப்பிற்கான பொறுப்பை காவல்துறை ஏற்றுக் கொள்ளுமா? நாளை எனக்கு ஏதேனும் நேர்ந்தால் அல்லது நான் தனியாக பயணம் செய்தால், காவல்துறை பொறுப்பேற்றுக் கொள்ளுமா? ஜே.என்.யூ எனக்கு பாதுகாப்பானதாக இருக்கலாம், ஆனால் வெளி உலகம் முற்றிலும் வேறுபட்டது.
தனியாக பயணம் செய்வதற்கு பயமா?
ஆமாம், இங்கே நடந்திருப்பவற்றில் எங்கள் பக்கத்தை அறியாதவர்கள் வெளியில் இருக்கிறார்கள். என்னை சந்தேகத்திற்குரிய நபர் என்று டெல்லி காவல்துறை கூறுவதை அவர்கள் சரியானது என்று நினைக்கலாம். இது போன்றதொரு கும்பல் வளாகத்திற்கு வெளியே என்னைத் தாக்கினால் என்ன செய்ய முடியும்?
வளாகத்தின் மன நிலை எவ்வாறு இருக்கிறது? இந்த இயக்கம் எங்கே செல்கிறது?
வளாகத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்க முயற்சித்து வருகிறோம். ஏனெனில் அதைச் செய்யாமல் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்று நாங்கள் கருதவில்லை. நிறைய பயம் இருக்கிறது. மாணவர்கள் தங்களுடைய வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் மீண்டும் இங்கே திரும்பி வர, கல்விச்சூழலை மீண்டும் சுமூகமான பாதைக்கு கொண்டு வர வேண்டும்.
கடந்த செமஸ்டரில் விடுபட்டுப் போன வகுப்புகளை எங்கள் ஆசிரியர்களின் உதவியுடன் முடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். அதற்குப் பின்னர் தேர்வுகள் நடக்க வேண்டும். ஆனால் புதிய செமஸ்டரை நாங்கள் இப்போது தொடங்கப் போவதில்லை. எவ்வாறு குளிர்கால செமஸ்டருக்கான போராட்டங்களைத் தீவிரப்படுத்துவது, துணைவேந்தரை அகற்றுவது ஆகியவை குறித்து விவாதிக்க நாங்கள் மீண்டும் பேரவையைக் கூட்டுவோம். சட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆனாலும் எவ்வளவு காலமானாலும், நாங்கள் போராடத் தயாராக இருக்கிறோம். மாணவர் பிரதிநிதிகள் என்ற முறையில், நிலைமையை சீராக்குவதும், கல்வியுடன் போராட்டம் என்பதை எளிதாக்கித் தருவதும் எங்களுடைய பொறுப்பாகும்.
ஜே.என்.யூவைத் தாண்டி, உங்களை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? கல்வியைத் தொடர நீங்கள் விரும்புகிறீர்களா?
எனது எம்ஃபில் படிப்பின் இரண்டாம் ஆண்டில் நான் இருக்கிறேன். மேலும் பிஎச்.டி. செய்யும் வகையில் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் இருக்கிறேன். இப்போதைக்கு, நான் என்னுடைய கல்வியில் கவனம் செலுத்த விரும்புகிறேன். பின்னர் விஷயங்கள் மாறக் கூடும் என்றால், திட்டங்களும் மாறக் கூடும்.
நன்றி: https://www.civilsocietyonline.com/interviews/aishe-ghosh-jnu-is-worth-fighting-for/
தமிழில் முனைவர்.தா.சந்திரகுரு- விருதுநகர்