ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை பயன்படுத்தி சிறுபான்மையினர் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் வெற்றியடைந்த மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததில் இருந்து ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன் சங்கபரிவார் அமைப்பினர் சிறுபான்மையினர் மீது அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மத்தியில் கடும் அச்சம் பரவி உள்ளது. இந்நிலையில் ஜெய் ஸ்ரீராம் என்ற பெயரில் மனிதர்கள் தாக்கப்படும் குற்றங்களை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு திரைத்துறையினர் பிரதமரிடம் மனு அளித்துள்ளனர்.
மேற்குவங்கம் பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆங்காங்கே சிறுபான்மையினர் மற்றும் தலித் இளைஞர்களை ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷமிடக்கோரி கடும் தாக்குதல் நடந்துள்ளன. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணிரத்னம், ராமச்சந்திரகுஹா, அபர்னா சென் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆளும் கட்சி என்பது தேசத்துக்கு இணையானது என எந்த பொருளும் இல்லை என்றும் ஆளுங்கட்சிக்கு விரோதமான விமர்சனங்களை வழங்குவது தேசத்திற்கு விரோதமாக கருதப்பட முடியாது. எதிர்ப்பை நசுக்காத தேசமே பலமான தேசம் என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.