இந்தியா முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 3427 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
மோடி அரசு பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மூர்க்கமான முறையில் செயல்படுத்தி வருகிறது. கடந்த 2017 ல் ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டது. இந்த ஆண்டில் விஜயா பேங்க் தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. இதனால் பல வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீமச் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுட் வங்கிகளின் கிளைகள் குறித்த விவரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். அதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது. கடந்த 5 ஆண்டுகளில் 3427 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளது. இதில் 75 சதவிகிதம் (2568 கிளைகள்) பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் என்ற அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 10 பொதுத்துறை வங்கிகள் 4 பெரிய வங்கிகளாக இணைக்கப்பட உள்ளதால் இந்த நிதியாண்டிலும் வங்கி கிளைகள் இணைப்பு அல்லது மூடல் எண்ணிக்கை கணிசமாக அளவில் இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.