tamilnadu

img

புதுவையில் இலவச அரிசி வழங்குவதற்கான முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த கிரண் பேடி

புதுச்சேரி ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்குவதற்கான முதல்வரின் கோரிக்கையை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நிராகரித்துள்ளார்.

புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் இரு நாட்களாக பிரச்சினை எழுப்பப்பட்டு வந்தது. ஆளுநர் பணமாகத் தர வேண்டும் என்று குறிப்பிட்டு அரிசி வழங்கும் கோப்பினை நிறுத்தி வைத்துள்ளதாக துறை அமைச்சர் கந்தசாமியும், முதல்வர் நாராயணசாமியும் தெரிவித்தனர். இதை அடுத்து, அரிசி போடாத மாதங்களுக்கான பணத்தை மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தாதது குறித்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இப்பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் ஆளுநரைச் சந்திக்கலாம் என்றும் பேரவையில் முடிவு எடுக்கப்பட்டது. அதை திமுக ஏற்றது. ஆனால் ஆளுநரைச் சந்திக்கும் முடிவை அதிமுக ஏற்கவில்லை.

அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியது. இதனிடையே சட்டப்பேரவையில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்குவதை தொடர்வது தொடர்பான அரசு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், அரசு கொறடா அனந்தராமன், எம்எல்ஏக்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, எம்.பி. வைத்திலிங்கம் மற்றும் கூட்டணிக் கட்சியான திமுக எம்எல்ஏக்கள் சிவா, வெங்கடேசன் ஆகியோர் இன்று (செப்.7) பிற்பகல் ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்துப்பேசினர்.

இதை அடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் நாராயணசாமி  "அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற எம்.பி. மற்றும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் ஆளுநரை சந்தித்துப் பேசினோம். அப்போது, சட்டப்பேரவையில் விவாதித்தது போல புதுச்சேரி மக்களுக்குத் தொடர்ந்து அரிசி கொடுக்க வேண்டும் என்பதை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறி அந்தத் தீர்மானத்தின் நகலை துணைநிலை ஆளுநருக்குக் கொண்டுவந்து கொடுத்து, புதுச்சேரி மக்கள் அனைவரும் எங்களுக்கு இலவச அரிசி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆகவே, அரிசி வழங்க ஏற்கெனவே அமைச்சர் கந்தசாமி அனுப்பிய கோப்புக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கேட்டோம். இதற்காக இந்த ஆண்டு 6 மாத காலத்துக்கு ரூ.160 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கோப்பை துணைநிலை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். மேலும் புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி கொடுக்க முடியாது என்று மத்திய அரசுக்கு எழுதியுள்ளதாக கூறிய துணைநிலை ஆளுநர் ஒட்டுமொத்தமாக நாங்கள் கொடுத்த கோரிக்கையை ஏற்காமல் நிராகரித்துவிட்டார்'' என்று தெரிவித்தார்.
 

;