tamilnadu

img

கடத்தல்காரர்களைக் காப்பாற்ற காங்கிரஸ், பாஜக, ஊடகக் கூட்டு

கேரள அரசு மீது பழி சுமத்துவதில் 
அரசியல்- பொருளாதார ஆர்வம்

திருவனந்தபுரம், ஜுலை 10- கேரளத்தில் அரசியல்- பொருளாதார அடிப்படையிலான ஆர்வத்தின் பேரில் காங்கிரஸ்- பாஜகவுடன் ஒரு பகுதி ஊடகங்களும் ‘தங்கம் கள்ளக்கடத்தல்’ என்கிற அடிப்படையான பிரச்சனையை திசை திருப்பும் முயற்சியாக கேரள அரசின் மீது பழிசுமத்துவதாக சிபிஎம் கேரள மாநிலக்குழு குற்றம் சாட்டியுள்ளது.  யார் தங்கம் கடத்தியது, யாருக்காக கடத்தப்பட்டது, எத்தனை காலமாக இது தொடர்கிறது, யாரெல்லாம் உதவுகிறார்கள், யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பவையே அடிப்படையான கேள்விகள். இந்த கேள்விகளுக்கு செல்லாமல் இருப்பதற்கான அதிதீவிர முன்னெச்சரிக்கையை இந்த கூட்டத்தினர் நடத்துகின்றனர். கள்ளக்கடத்தல் மூலம் கொண்டுவரப்பட்ட தங்கத்தை மீட்க சுங்கத்துறை அதிகாரிகளை முதலில் அழைத்தது பிஎம்எஸ் தலைவர் என்பது தெளிவாகி இருக்கிறது. இதிலிருந்து கவனத்தை திருப்பவே பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் முதலமைச்சரின் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டினார். பாஜகவுக்கு துணை நிற்கிறது யுடிஎப். எந்த ஒரு தொடர்பும் இல்லாத மாநில அரசையும் இடதுசாரிகளையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முடியுமா என்கிற தோல்விகரமான முயற்சி நடக்கிறது. தங்க கடத்தல்களின் 98 சதவிகிதமும் பிடிபடாமல் போகும் சூழ்நிலையில் விழிப்புடன் செயல்பட வேண்டிய ஊடகங்களில் ஒரு பகுதி போலிச் செய்திகளின் மூலம் கவனத்தை திசை திருப்புகின்றன.  

முதல்வரை சந்தேகத்தின் முனையில் நிறுத்த போலிச்சித்திரம் தயாரித்தது காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ஜெய்ஹிந்த் டிவி சானலாகும். பாஜகவைச் சேர்ந்த சந்தீப் நாயர் சிபிஎம்மைச் சேர்ந்தவர் என நம்ப வைக்க ஏசியாநெட், மனோரமா டிவி சானல்கள் எடிட் செய்த காட்சிகளை ஒளிபரப்பின. இது போலியானது என அம்பலமான பின்னரும்கூட வருத்தம் தெரிவிக்க முன் வரவில்லை. பிஎம்எஸ் தலைவரின் தொடர்பு வெளியான பின்னரும் செய்தியில் தொழிற்சங்க தலைவர் என்று மட்டும் குறிப்பிட்டு பாதுகாப்பதில் மனோரமா நாளிதழ் கவனமாக செயல்பட்டது. குற்றவாளிகளை பாதுகாக்கவும் இடதுசாரிகளை அவதூறு செய்யவும் இந்த ஊடகங்கள் காங்கிரஸ், பாஜகவுடன் சேர்ந்து முயற்சிக்கின்றன. முதல்வர் பினராயி விஜயனுக்கும் கேரள அரசுக்கும் முன்னெப்போதும் கிடைத்திராத மக்கள் ஆதரவு இவர்களை பதற்றமடைய வைத்துள்ளது. இதை புரிந்துகொண்டு, வழக்கைத் தகர்க்கும் திட்டமிட்ட முயற்சியை முறியடிக்க மக்கள் முன்வர வேண்டும் என்று சிபிஎம் மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.