புதுச்சேரியில், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல், பைகள் உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, புதுச்சேரியிலும் கடந்த மார்ச் மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பிளாஸ்டிக் தடைக்கு அவகாசம் அளிக்கும்படி கேட்டு கொண்டதால், இந்த தடை அமல்படுத்தப்படாமல் இருந்தது. மேலும், ஜூன் மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக எழுந்துள்ளது. இது குறித்து இன்று அதிகாரிகள், வணிகத்துறையினர், தொழிற்சாலை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. அதில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கந்தசாமி, ”புதுச்சேரியில், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை எந்த மாற்றமும் இருக்காது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் புதுச்சேரியிலும் தடை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.