tamilnadu

img

மெட்ரோ நகரங்களில் காங்கிரஸுக்கு வீழ்ச்சி

புதுதில்லி:
இந்திய மெட்ரோ நகரங்களில் இம்முறை பாஜகவின் பலம் கூடியுள்ளது.மற்ற நகரங்களைக் காட்டிலும் இந்திய மெட்ரோ நகரங்களில் படித்தவர்களின் எண்ணிக்கையும், அமைப்புசார்ந்த துறைகளில் பணியாற்றுகிற இளைஞர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகமாக இருக்கும். இதனால் இவர்களின் வாக்கு யாருக்கு என்பது கவனிக்கப்படும் ஒன்றாக உள்ளது. இம்முறை இந்திய மெட்ரோ நகர வாக்காளர்களின் வாக்கை காங்கிரஸ் கட்சி வெகுவாக இழந்துள்ளது. அதே சமயத்தில் பாஜக கூட்டணி 50 விழுக்காட்டுக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 30 தொகுதிகள் சென்னை, மும்பை, தில்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய மெட்ரோ நகரங்களில் வருகின்றன. இவற்றில் மும்பையில் உள்ள 6 தொகுதியிலும் (பாஜக 3, சிவசேனா 3), தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும், ஹைதராபாத்தில் 1 தொகுதியிலும், பெங்களூருவில் 3 தொகுதிகளிலும் என 17 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை பெற்றது. இவற்றில் 14 தொகுதிகளில் பாஜகவே நேரடியாகப் போட்டியிட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள 8 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுகவும், ஹைதராபாத்தில் 1 தொகுதியில் அனைத்திந்திய மஜீஸ் இதேஹதுல் முஸ்லிமீன், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி 1 தொகுதியிலும் முன்னிலை பெற்றன. மாலை 3 மணி நிலவரப்படி இந்திய மெட்ரோ நகரங்களின் ஒரு தொகுதியில் கூட நேரடியாக காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இல்லை.

;