புதுச்சேரி, ஜூன் 2-புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவராக மூத்த உறுப்பினர் சிவகொழுந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.புதுவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். காமராஜர் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம், புதுவை சட்டப்பேரவைத் தலைவராகவும் செயல்பட்டார். இதனால் பேரவைத் தலைவர் பதவியையும், பேரவை உறுப்பினர் பதவியையும் வைத்திலிங்கம் ராஜினாமா செய்தார். இந்நிலையில், புதுவைபேரவைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணியுடன் முடிவடைந்தது. பேரவைத்தலைவர் பதவிக்கு அவர் மட்டுமே மனுதாக்கல் செய்திருந்தார். இதையடுத்து புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இதில் தற்போது துணைத் தலைவராக உள்ள வி.பி.சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து திங்கள்கிழமை (ஜூன் 3) கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் வி.பி.சிவக்கொழுந்து, புதுவை பேரவைத் தலைவராகப் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவக்கொழுந்துவிற்கு முதல்வர் நாராயணசாமி சால்வை அணிவித்து வாழ்த்தினார்.அப்போது அமைச்சர் கமலகண்ணன், வைத்திலிங்கம்,எம்பி.உள்ளிட்டோர் உடனிருந்தனர்.