அந்தத் தனிக்குயிலின்
அழுகையொலி கேட்டிலையோ?
எந்தப் பிணியால்
இன்னலெனத் தேர்ந்திலையோ?
துணைக்குப் பறந்துவந்த
தோழர்களின் சதியாலா?
கணைக்குப் பணிகொடுக்கும்
கல்நெஞ்சர் வினையாலா ?
எங்கெங்கோ செல்லாமல்
இலக்கொன்றைக் குறிபார்த்துத்
தங்காமற் செல்லுமிதைத்
தாங்கிடுவார் இலையாலா?
கூடவே இருந்து
குழிபறிக்கும் எத்தர்களின்
கூடம்மேல் இருந்த
குறை,நெஞ்சில் உளதாலா?
குப்பைகளைக் கொத்தாமல்
குற்றமெதும் நத்தாமல்
இப்புவியில் நெல்மணியை
எண்ணியதால் இந்நிலையோ ?
கலந்தகறுப் பரிசிகளைக்
கண்ணெடுத்தும் பாராமல்
மலர்ந்த கதிருக்காய்
மல்லாடிக் களைத்ததுவோ!
சாக்கடையைத் தள்ளிச்
சந்தனப்பூ தேடியதாய்ப்
பூக்கடைகள் வாசலிலே
பொறுமை காத்ததுவோ ?
பேடும் இழந்ததுவாய்ப்
பெருநாடும் இழந்ததுவாய்ப்
பீடும் இழந்ததுவாய்ப்
பித்துத்தான் கொண்டதுவோ!
அந்தத் தனிக்குயிலை
அரவணைக்க மாட்டாமல்
இந்தச் சமுதாயம்
ஏக்கத்தில் வீழ்த்திடுமோ !