புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு, கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், மின் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு மின் கட்டண உயர்வானது அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனம் ஆகிய பகுதிகளில் வீடுகளில் 100 யூனிட் வரையிலான மின் நுகர்வுக்கு ஒரு யூனிட்டுக்கு கட்டணமாக ரூ.2.25-இல் இருந்து ரூ.2.70 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரையிலான யூனிட்டுக்கு தற்போது ரூ.5.40-இல் இருந்து ரூ.6 ஆகவும், 301 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கான கட்டணம் ரூ.6.80-இல் இருந்து ரூ.7.50 ஆகவும் உயர்ந்தப்பட்டுள்ளது. நிலைக்கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.30-இல் இருந்து ரூ.35 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடிசைத் தொழில்கள் ஆகியவற்றுக்கு பழைய கட்டணமே தொடரும். எனினும் வர்த்தக நிறுவனங்களுக்கு நிலைக்கட்டணம் மாதத்துக்கு 1 கிலோ வாட்டுக்கு ரூ.75-இல் இருந்து ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயரழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு நிலைக்கட்டணம் ஒரு கிலோவாட்டுக்கு ரூ.450 ஆக உயர்ந்துள்ளது.
சிறு விவசாயிகளுக்கு மாதாந்திர நிலைக்கட்டணம் மோட்டாருக்கு ரூ.25 ஆகவும், இதர விவசாயிகளுக்கு மாதம் ரூ.100-ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், குடிசைத்தொழில் உள்ளிட்டவைக்கு கிலோவாட்டுக்கு ரூ.30-ஆக நிலைக்கட்டணம் உயர்ந்துள்ளது.