புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 18-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
புதுச்சேரியில், இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக சார்பில் மாநில எதிர்க்கட்சித் தலைவர் சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தேவபொழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் முடிவில், வரும் 18-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்; ஸ்மார்ட் மீட்டர் திட்டம் மற்றும் மின்துறை தனியார்மயத்தை கைவிட வலியுறுத்தியும், வரும் 18-ஆம் தேதி அன்று இந்தியா கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.