புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றை மீட்டெடுக்கும் வகையில் தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் ஞாயிற்றுக்கிழமை மரபு நடைபயணத்தை மேற்கொண்டனர்.
சங்க காலம் உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் தமிழர்கள் மிகவும் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. தொல்லியல் ஆர்வலர்கள் இந்தப் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதனொரு பகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தொல்லியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்களை உள்ளடக்கிய 50-க்கும் மேற்பட்டோர் குழுவாகச் சென்று மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு தொல்லியல் அடையாளங்களை பார்வையிட்டனர்.
கீழடிக்கு இணையான சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும், சமீபத்தில் அகழாய்வு நடத்த உயர்நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட பொற்பனைக் கோட்டையிலிருந்து இந்த மரபு நடைபயணம் தொடங்கியது. இங்குள்ள சங்க கால கோட்டை சுவர்கள், அகழி அமைப்புகள், உருக்கு ஆலை இருந்ததற்கான தடயங்களை குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் புதுக்கோட்டையின் முந்தைய தலைமையிடமாகக் கருதப்படும் திருக்கட்டளையில் உள்ள சோழர்கால கற்றளியைப் பார்வையிட்டனர். தொடர்ந்து யானை மீதேறி முருகன் காட்சிதரும் கண்ணனூரில் உள்ள முற்காலச் சோழர் காலத்து பழைமையான சுப்பிரமணியர் கோவிலைப் பார்வையிட்டனர். தொடர்ந்து பூலாங்குறிச்சியில் களப்பிரர் காலத்து கல்வெட்டு, ஏனாதி சிவன் கோவில், கொடும்பாவூர் முருகன் கோவில், குடுமியான்மலை குடுமிநாதர் கோவில் உள்ளிட்டவற்றை மரபுநடை குழுவினர் பார்வையிட்டனர்.
இப்பயணத்திற்கு தொல்லியல் ஆய்வுக்கழகத் தலைவர் கரு.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மருத்துவர் ராமதாஸ், வரலாற்று ஆய்வாளர் ராஜா முகமது, சுகவன முருகன் உள்ளிட்டோர் நடைபயணக் குழுவினரை வாழ்த்தி வழியனுப்பினர். ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர்கள் கஸ்தூரி ரெங்கன், புதுகை செல்வா, சி.ஆ.மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.