சுகாதாரமற்ற விடுதி மாணவர்கள் போராட்டம்
புதுக்கோட்டை, ஆக.29-புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் மூவாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் அருகே அம்பேத்கர் விடுதி, ஆதிதிராவிடர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி உள்பட 4 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரில் உள்ள மன்னர் கல்லூரி அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் உணவு சரியில்லை. விடுதியை சுற்றி சுகாதாரம் இல்லை. அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை எனக்கூறி புதன்கிழமை இரவு உணவை புறக்கணித்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி விடுதியை ஆய்வு செய்து மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர உத்தரவிட்டார்.
ஆக்கிரமிப்பில் நல்லான்குளம்: மீட்டுத் தர மக்கள் கோரிக்கை
தஞ்சாவூர் ஆக.29-தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு நல்லான்குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தண்ணீர் நிரப்பித் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, பொதுமக்கள் சார்பில் கொன்றைக்காடு எஸ்.டி.பன்னீர்செல்வம், கர்ணன், நீலகண்டன் உள்ளிட்டோர் கையெழுத்திட்ட மனுவை மக்கள் நேர்காணல் முகாமில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜிடம் வழங்கினர். அம்மனுவில், "காலகம்-2 கிராமத்தில் இருக்கும் புதுக்குளம் என்ற நல்லான்குளம் ஆக்கிரமிப்புகளால் பெருமளவில் சுருங்கிவிட்டது. நீர்வழிப் பாதைகளும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நிலையில், தண்ணீர் வர முடியாதவாறு அடைபட்டுள்ளது. மேலும் குளத்தின் நீர்ப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குளத்திற்கு நீர் நிரப்ப, சேதுபாவாசத்திரம் கல்லணை கால்வாய் ஆற்றிலிருந்து கரம்பக்காடு வாய்க்காலில் இருந்து புதிய மதகு அமைத்து தரவேண்டும். இந்த குளத்தை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வழி பாதைகளை சரி செய்து தர வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெண்ணாற்று நீர் திறந்து விடுக விவசாயிகள் கோரிக்கை
திருவாரூர் ஆக29-காவிரி டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிக்காக காவிரி நீரை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். கால தாமதமாக துவங்கிய தூர்வாரும் பணியால் சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே பொதுப்பணித்துறை மூலமாக நடைபெறும் மராமத்து பணியினால் நீரோட்டத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இப்பணிகளை நிறுத்தி விட்டு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை முன்வைத்து ஆக.31 மாலை திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றிய தலைநகர்களிலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் அனைத்து பகுதி மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அடிப்படை வசதி கோரி சிபிஎம் பட்டினி போராட்டம்
திருவாரூர் ஆக29-வேப்பத்தாங்குடி ஊராட்சிகளில் நிலவும் பல்வேறு குறைகளை களையக் கோரியும், மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் வேப்பத்தாங்குடி நியாய விலைக் கடை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பட்டினி போராட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.மாதவன் தலைமையேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி நிறைவு செய்து உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.ஆர்.சாமியப்பன், பா.கோமதி பேசினர். கிளைச் செயலாளர் என்.சக்திவேல், பெண்கள் கட்சி கிளைச் செயலாளர் பா.அம்பிகா மற்றும் வேப்பத்தாங்குடி, வஞ்சியூர், வயலூர், பரமாக்குடி கிளை உறுப்பினர்கள், கிராமக் கமிட்டி நிர்வாகிகள், மாதர் சங்க நிர்வாகிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். வயலூரில் பழுதடைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து மையக் கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும். 1.5 ஏக்கர் பரப்பளவுள்ள வஞ்சியூர் அய்யனார் குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு பாய்கால் வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் மிக விரைவாக கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.