tamilnadu

உர விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரிக்கை

அறந்தாங்கி, அக்.5- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல் குடியில் விவசாய சங்கம், விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றிய பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வி.தொ.ச மாவட்டக் குழு உறுப்பினர் பி.ஆறுமுகம் தலைமை வகித்தார்.  புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் விவசாய சங்க ஒன்றியத் தலைவராக எஸ்.கருப்பையா, செயலாளராக கே. நாகராஜன், பொருளாளராக ஜி.அசோகன் மற்றும் 6 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. விவசாய தொழிலாளர் சங்க  ஒன்றிய தலைவராக பி.ஆறுமுகம், செயலாள ராக வி.லெட்சுமி, பொருளாளராக ராஜம்மாள் மற்றும் 5 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது.  கூட்டத்தில் 2017ம் ஆண்டு பிரிமியம் செலுத்திய பயீர் காப்பீட்டு தொகையை உடன் வழங்க வேண்டும். விவசாய பணிகள் துவங்கி நடைபெற்று வருவதால் உரம் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அருணாச்சல காவிரி ஆறு சத்திரம் ஏரி முதல் கோடியக்கரை வரை மராமத்து பணி செய்ய வேண்டும் காவிரி வைகை குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் வரும் 11-ம் தேதி குடிமனை பட்டா கேட்டு வி.தொ.ச சார்பாக தாலுகா அலுவலகத்தில் நடைபெற விருக்கும் மனு கொடுக்கும் போராட்டத்தில் திரளானோர் கலந்து கொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.