அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் அறந்தாங்கி அரசு கல்லூரி, தொடங்கிய நாளில் இருந்து தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களை கொண்டு இயங்கி வருகிறது. இவர்கள் காலமுறை ஊதியத்திற்கு நிகரான அனைத்து பணிகளையும் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மேற்கண்ட ஆசிரியர்களை புறக்கணித்து அண்ணாமலை பல்கலைக்கழக மிகைப் பேராசிரியர்களை மாற்று பணியாக இக்கல்லூரியில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த இக்கல்லூரி தற்காலிக ஆசிரியர்களும் பணியாளர்களும் புதன்கிழமை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வியாழன் அன்று பணிக்கு செல்லாமல் அனைத்து ஆசிரியர்களும் அலுவலக பணியாளர்களும் பேராசிரியர் என்.கே.ராஜேந்திரன் தலைமையில் கல்லூரி நுழைவுவாயிலில் அமர்ந்து பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்திரம் வழங்கிட கோரி கோரிக்கை முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.