tamilnadu

திரவ உயிர் உரங்கள் மூலம் பயிர் விளைச்சலைப் பெருக்கலாம்

 புதுக்கோட்டை, செப்.19- திரவ உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண் வளம் மற்றும் பயிர் விளைச்சலைப் பெருக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித் துள்ளது: புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் ஆண்டுக்கு 50,000 லிட்டர் திரவ உயிர் உரங்கள் தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விநியோகம் செய்யப்படுகிறது.  உயிர் உரங்கள் காற்றில் உள்ள நைட்ரஜன் வாயுவைத் தழைச்சத்தாக மாற்றிப் பயிர்களுக்கு அளிக்கின்றன. நோய் எதிர்ப்புத் திறனை மண்ணில் உண்டாக்குகின்றன. வறட்சி தாங்கும் திறனைப் பயிர்களுக்குக் கொடுக்கின்றன. இரசாயன உரங்களில் 20 முதல் 25 சதவீதம் வரை தழைச்சத்து மற்றும் மணிச்சத்து சேமிக்கப்படுவதால் உரச்செலவு குறைகிறது. மாசற்ற சுற்றுப்புறச் சூழ்நிலையினை ஏற்படுத்துகிறது. மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. மகசூல் 10 சதம் வரை அதி கரிக்கப்படுகிறது.  திரவ உயிர் உரங்கள் ஒரு மில்லி லிட்டருக்குப் பன்னூறு மடங்கு பாக்டீரியாக்கள் கூட்டமைப்பு உருவாக்கும் அலகு களை கொண்டிருக்கும். ஆயுட்காலம் 12 முதல் 24 மாதங்கள் வரை. தானியங்கிக் கொள்கலன் அடைப்பான் பயன்படுத்தித் தயாரிக்கப்படுவதால் பயன்படுத்துதல் மற்றும் எடுத்துச் செல்லுதல் எளிது.  எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இரசாயன உரங்களைக் குறைத்து உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களைப் பயன்படுத்தி நுண்ணீர்ப் பாசனத் திட்டம், மாற்றுப் பயிர்ச் சாகுபடித் திட்டங்களை இணைத்துச் செயல்படுத்தி அதிக மகசூல் பெற்று நிகர இலாபத்தை அதிகரித்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.