தஞ்சாவூர், அக்.8- 2 கி.மீ தூரம் தினமும் தனது தந்தையுடன் சென்று, தான் நட்டு வைத்த மரக்கன்றுக்கு தினமும் தண்ணீர் விட்டு பராமரிக்கும் மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி நாட்டாணிக்கோட்டை வடக்கு முத்தழகப்பா சாலை, டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த அப்பாஸ்- சகானாபேகம் தம்பதி. விவசாயியான அப்பாஸூக்கு ஆப்ரின் சஃப்ரியா(14) அஃபியா ஷெரின்(10) என்ற 9 மற்றும் 5ஆம் வகுப்பு படிக்கும் இரு மகள்கள் உள்ளனர். இருவரும் பேராவூரணி டாக்டர் ஜே.சி குமரப்பா பள்ளியில் படித்து வருகின்றனர். இதில் இளையவரான அஃபியா ஷெரின் மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் ஆர்வமுடையவர். இந்நிலையில், பேராவூரணி நகரில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில், புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் இயங்கி வருகிறது. திறந்தவெளியில் இயங்கி வரும் இந்த அலுவலகத்தை சுற்றிலும், நிழல் தரும் வகையில், கடந்த ஜூலை 23 ஆம் தேதி அன்று, தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளரும், பள்ளித் தாளாளருமான டாக்டர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமையில் டாக்டர் ஜே.சி.குமரப்பா சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் 50 பேர் கலந்து கொண்டு வேம்பு, கொய்யா, தேக்கு, வாகை உள்ளிட்ட பல்வேறு வகையான, நூற்றுக்கணக்கான மரங்களை நட்டனர். தற்போது மரக்கன்றுகளைச் சுற்றிலும், கூண்டு வேலி அமைத்து தண்ணீர் விட்டு வேளாண் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அப்போது, மாணவி அஃபியா ஷெரின் தன் தந்தையுடன் வந்திருந்து வாத மரக்கன்றினை நட்டுச் சென்றார். ஏறத்தாழ 50 மாணவர்கள் நட்டுச் சென்ற பல்வேறு மரக்கன்றுகள் அலுவலக வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தாலும் மாணவி அஃபியா ஷெரின் மட்டும், தினந்தோறும் பள்ளிக்கு செல்லும் முன் காலை 8 மணிக்கு, தன் தந்தையுடன் வேளாண்மைத்துறை அலுவலகம் வந்து தான் நட்டுச் சென்ற மரக்கன்றுக்கு தண்ணீர் விட்டு அதன் வளர்ச்சியை தன் கண்களால் கண்ணுற்று மகிழ்ச்சியடைந்து செல்கிறார். இதுகுறித்து மாணவி அஃபியா ஷெரின் கூறுகையில், "மரக்கன்றுகள் நடும் விழாவோடு சிலர் அதனை மறந்து விடுகின்றனர். பெரும்பாலான செடிகள், தண்ணீர் விடாமல் கருகி விடுகின்றன. கால்நடைகள் கடித்தும் வீணாகி விடுகிறது. எனவே, நாம் நட்டுச் சென்ற செடியை தினமும் தண்ணீர் விட்டு, நாம் பராமரிக்க வேண்டும் என விவசாயியான என் பெற்றோர் சொன்னவாறு, எனது தந்தை உதவியுடன், குடத்தில் தண்ணீர் எடுத்துச் சென்று செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறேன். மழை பெய்யும் போது மட்டும் தண்ணீர் ஊற்றுவதில்லை" என்றார். மாணவியின் இச்செயலைக் கண்ட வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி மாணவியை, அழைத்துப் பாராட்டியதோடு, அஃபியா ஷெரினைப்போல நாம் ஒவ்வொருவரும் சுற்றுச் சூழல் ஆர்வலராய் செயல்பட்டு நாம் வாழும் இப்பூமியை பசுமைப் போர்வையாய் மாற்ற வேண்டும்" என்றார். மாணவியின் இச்செயல் பரவலாக முகநூல், வாட்ஸ்அப் ஆகியவற்றில் பகிரப்பட்ட நிலையில், பலரும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.