tamilnadu

img

அழியும் மல்லிகைப்பூவை அரசே கொள்முதல் செய்க!

பூ விவசாயிகள் கோரிக்கை

மதுரை, மே 1- மதுரை மாவட்டத்தில் மஞ்சம்பட்டி, தொப்புலாம்பட்டி, ஆமந்தூர்பட்டி, கள்ளந்திரி, நாயக்கன்பட்டி, பொய்கைக்கரைபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 150 ஏக்கரில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல், காவல்துறை நெருக்கடியால் விவசாயிகள் பூக்களை பறிக்க நிலங்களுக்கு செல்லமுடியவில்லை. தப்பித்தவறி ஓரிருவர் பூக்களை பறித்தாலும் அதை சந்தைக்குக் கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் 50 ஏக்கர் மல்லிகை பூ அழிந்து விட்டது. 100 ஏக்கர் மல்லிகை தப்பியுள்ளது. பூ வை மாவட்ட நிர்வாகமே கொள்முதல் செய்ய வேண்டும். பூக்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அடையாள சீட்டு வழங்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூக்களை அழிக்க தயாராகும் விவசாயிகள்

இதேபோல் மதுரை பொதும்பு கிராமத்தில் முப்பது ஏக்கரில் கோழிக்கொண்டை பூ. செண்ட் பூ விளைவிக்கப்பட்டுள்ளது. பூக்கள் அறுவடை தருணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அறுவடை செய்யமுடியவில்லை.  செடியில் பூக்கள் அதிகமிருப்பதால் செடிகள் ஒடிந்து கீழே விழுந்துவிட்டன. இதையடுத்து பூக்களை கொள்முதல் செய்ய வேண்டுமென மதுரை ஆட்சியருக்கு சுமார் 30 விவசாயிகள் இணையதளம் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பொதும்பு கிராமத்திற்கு வந்து பூச்செடிகளை பார்வையிட்டனர்.

கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மொத்த பூக்களையும் வியாபாரிகள் கொள்முதல் செய்யவில்லை. அதிகபட்சமாக கிலோ 10 ரூபாய் என்ற அடிப்படையில் 20 கிலோ மட்டுமே வாங்கியுள்ளனர். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர் விவசாயிகள். உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.  கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள விவசாயிகள், தற்போது விளைவித்த பூக்களை அழிக்க  தயாராகிவருகின்றனர்.

தோட்டக்கலைத்துறை என்ன சொல்கிறது?

இது குறித்து மதுரை மேற்கு வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரி தென்னகமணியிடம் கேட்டதற்கு, " குறிப்பாக விவசாயிகளின் வாகனத்தை காவல்துறை தடுக்கக் கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பூ பறிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. விவசாயிகள் தாங்கள் விவசாயி தான் என்பதற்கு புகைப்படத்தோடு மதுரை மேற்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம், மதுரை கிழக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலுள்ள தோட்டக் கலைத்துறை அலுவலரை சந்தித்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என்றார். மேற்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி தோட்டக்கலைத்துறை இயக்குநர் கைபேசி எண்: 89404 00151.     

       (ந.நி)