சென்னை, செப்.1- சென்னையில் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 19 ஆம் தேதி ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உள்ளது. இதன்படி ஹெரிடேஜ், திருமலா, டோட்லா, ஜெர்சி, சங்கம், சீனிவாசா, கோவர்த்தனா, ஜேப்பியார் உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தி உள்ளது. இதில் டோட்லா, கோவர்த்தனா, சங்கம், ஹெரி டேஜ், ஜெர்சி உள்ளிட்ட நிறுவனங்கள் விலை உயர்வை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன.
திருமலா, ஜேப்பியார், ஆரோக்கியா ஆகிய பால் நிறுவனங்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் விலை உயர்வை நடை முறைப்படுத்துவதாக அறிவித்துள்ளன. இதன்படி இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் ரூ.38 லிருந்து 40 ரூபாயாக உயர்ந்துள்ளது. சமன்படுத்தப்பட்ட பால் ரூ.40 லிருந்து ரூ.44 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.50லிருந்து ரூ.52-க்கும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.56லிருந்து ரூ.58 ஆகவும் உயர்ந்துள்ளது. தயிர் 1 லிட்டர் ரூ.50 லிருந்து ரூ.56-க்கு உயர்ந்துள்ளது. தனியார் பால் விலை உயர்வு காரணமாக டீ, காபி விலை ரூ.2 அதிகரி த்துள்ளது.