கிரானைட் குவாரி ஊழல் வழக்கு பி.ஆர்.பழனிச்சாமி விடுதலை ரத்து
மதுரை,ஆக.12- கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் தொழிலதிபர் பி.ஆர். பழனிச்சாமி விடுதலையை ரத்து செய்து உயர்நீதி மன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர், ஒத்தக்கடை, கீழவளவு, மேலவளவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டியெடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பி.ஆர். பழனிசாமி மற்றும் அவரது பங்குதாரர்கள் உள்ளிட்டோர் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் வழக்கு தொடரப்பட்டு மேலூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இருந்து பி.ஆர். பழனிசாமி உள்பட 3 பேரை விடுவித்து மதுரை மேலூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அப்போதைய ஐஏஸ் அதிகாரி, அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மதுரை மாவட்ட ஆட்சியர், அரசு தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, தொழில் அதிபர் பி.ஆர். பழனிசாமி உள்பட 3 பேரை விடுவித்ததை ரத்து செய்து உத்தர விட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி, அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவும் ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.