tamilnadu

img

மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணியில் ஈடுபட்டுள்ள வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை

விருதுநகர், மே.4- விருதுநகர் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு ள்ளதால் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள் கிழமை  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் தங்களது  சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்துள்ள தொழிலாளர்கள்  விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், விருதுநகரில் கடந்த மார்ச் 1 ம் தேதி அரசு மருத்துவ கல்லூரி கட்ட தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து,  கட்டுமானப் பணிகள் கடந்த  இரு மாதங்களாக நiடைபெற்று வருகிறது. இப்பணியில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அத் தொழிலாளர்கள் கூறுகையில், எங்களுக்கு  உணவு சரிவர கிடைப்பதில்லை. மேலும், அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை. எனவே,  எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க  வேண்டும் என தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அரசு அதிகாரிகள் அத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், வரும் மே.,6ம் தேதிக்கு பின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உரிய  ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.