உடுமலை, ஏப்.11-
உடுமலையில், வீடுகளுக்கு நேரடியாக மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் செல்லும் வகையிலும், கிராமங்கள் தோறும், சமுதாய சந்தைகள் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசியமற்ற முறையில் சுற்றிய, 600க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இருப்பினும், ஊரடங்கு உத்தரவை மீறியும், 'கொரோனா' தொற்று பரவும் அபாயம் குறித்த விழிப்புணர்வு இல்லாமல், தினமும் காலை நேரத்தில், உழவர் சந்தை, மளிகை, இறைச்சி, மருந்து எனப் பல காரணங்களைக் கூறி, வாகனங்களில் சுற்றுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், நூதன முயற்சியில் அதிகாரிகள் களம் இறங்கினர்.
சாலையில் வாகனத்தில் வருவோரை தனித்தனியாக நிறுத்தி, அவர்களின் வலது கை சுண்டு விரலில், தேர்தலுக்குப் பயன்படுத்தும் அழியாத மை வைத்தனர். மேலும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வெளியே வர வேண்டும் என, அறிவுறுத்தினர்.
கை விரல்களில் மை வைக்கப்பட்டவர்கள், 5 நாள் கழித்தே வெளியில் வர வேண்டும். மீறினால், வழக்குப்பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.