tamilnadu

நெல்லை கண்ணன் கைதுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம் - 1ம் பக்கத் தொடர்ச்சி

அராஜக பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சென்னை, ஜன.2-  நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன்  ஜனவரி 2 வியாழ னன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறந்த பேச்சாளரும், சிந்தனை யாளருமான நெல்லை கண்ணன் அவர்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்  ஷா ஆகியோரை தரக்குறைவாக பேசினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பிணையில் வெளிவரமுடியாத வகையில் தமிழக காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.   ஆனால், பாஜக தலைவர்களான ஹெச். ராஜா, எஸ்.வி. சேகர் ஆகியோர்  வன்முறையைத் தூண்டும் வகையிலும், தந்தை பெரியார் குறித்தும், நீதிபதிகள், காவல்துறையினர் மற்றும் மாற்றுக் கட்சித் தலைவர்களையும், பெண்களையும் அவ மதிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வந்துள்ள னர். இதுகுறித்து பல அமைப்புகள் போராட்டங் கள் நடத்திய பின்னரும் பாஜக  தலைவர்கள் மீது  தமிழக காவல்துறையினர் குறைந்தபட்ச நட வடிக்கைக் கூட எடுக்கவில்லை. பாஜக தலைவர் களுக்கு ஒரு நியாயம், நெல்லை கண்ணணுக்கு இன்னொரு நியாயம் என்ற வகையில் பாரபட்ச மான முறையில் செயல்படும் காவல்துறை யினரின் போக்கு கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம், மாலை நேர இயக்கங்கள் உள்ளிட்ட எந்த இயக்கத் தையும் நடத்துவதற்கு காவல்துறை அனுமதிப்ப தில்லை. கோலம் போடும் பெண்கள் உட்பட கைது செய்யப்படும் மோசமான நிலை உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு மேல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜனநாயக அடிப்படையில் கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் காவல்துறை, பாஜகவினரின் அராஜக போக்கு கள் மீது கிஞ்சிற்றும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதையெல்லாம் பார்த்தால் தமிழகத்தில் நடை பெறுவது அதிமுக அரசா?, பாஜக அரசா? என்ற கேள்வி எழுகிறது. தமிழக காவல்துறை மற்றும் எடப்பாடி அரசின் பாரபட்ச அணுகுமுறைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

வழக்குகளை திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல் 

இந்நிலையில், நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் பேச்சில்  எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் தான் பேசினார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்போது கோலம் வடிவிற்கு மாறி யுள்ளது. கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்கள் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்கிறது. மேலப்பாளையத்தில் பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. அவர் எப்போதும் நகைச்சுவையுடன் பேசக்கூடியவர். அவர் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் தான் பேசினார். ஆனால் அதை பெரிதுபடுத்தியுள்ளனர். எனவே நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்துகின்றனர். இது பா.ஜ.க.வினர் மனசாட்சி இல்லாதவர்கள் என்பதை காட்டுகிறது. இதன் மூலம் இங்கு பாசிச ஆட்சி நடைபெறுவது தெரிகிறது” என்றார்.
 

;