762 - பாக்தாத் நகரின் கட்டுமானம் தொடங்கப்பட்டது. அப்பாசிய கலீஃபகம் 750இல் உருவானபின், இரண்டாம் கலீஃபாவான அல்-மன்சூர் தலைநகராக பாக்தாத்தை உருவாக்கினார். ஜோதிடர்கள் தேர்ந்தெடுத்ததால் இந்நாளில் கட்டுமானம் தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. உலகம் முழுவதிலிருந்தும் கட்டிடப் பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், கட்டிட வரைபட ஓவியர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் என்று சுமார் ஒரு லட்சம் பேரை அழைத்துவந்து, முன்னதாகவே ஊதியம் வழங்கி நகரைக் கட்டச்செய்தார் அல்-மன்சூர். டைக்ரிஸ் நதிக்கரையில் அமைந்திருந்ததால், வறண்ட பகுதியிலும் தாராளமாகத் தண்ணீர் கிடைத்ததும், நதியின் வணிக வழித்தடங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய இடமாக இருந்ததும் பாக்தாத் செழிக்க உதவின. ‘அறிவகம்(ஹவுஸ் ஆஃப் விஸ்டம்)’ என்பதை உருவாக்கிய அல்-மன்சூர், கிரேக்கம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலிருந்தும், ஏராளமான நூல்களை அரபியில் மொழிபெயர்க்கச் செய்தார். அறிவியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டிய, இஸ்லாமியப் பொற்காலத்தின் தொடக்கமாக இதுவே அமைந்தது.
இவற்றால் வணிகத்தில் மட்டுமின்றி, கற்றலுக்குமான மையமாக பாக்தாத் மாறியது. அப்பாசிய கலீஃபாக்கள் கல்வியை ஊக்குவிப்பவர்களாக மட்டுமின்றி, நூல்களைத் திரட்டுபவர்களுமாக இருந்ததால், ஏராளமான (முதலில் தனிப்பட்டவையாக இருந்தாலும், பின்னர் பொது) நூலகங்கள் உருவாயின. எட்டாம் நூற்றாண்டில் சீனர்களிடமிருந்து காகிதம் தயாரிப்பை அப்பாசியர்கள் கற்றபின், காகிதம் தயாரிக்கும் இடமாக பாக்தாத் விளங்கியதும் நூல்களை உருவாக்குவதில் முக்கியப்பங்குவகித்தது. அரபியில் மட்டுமின்றி, இப்பகுதி மக்களின் பிற மொழிகளிலும் நூல்கள் திரட்டப்பட்டிருந்தன. 8,9ஆம் நூற்றாண்டுகளில், முதன்முதலில் பத்து லட்சம் மக்கள்தொகைகண்ட, உலகின் மிகப்பெரிய நகரமாக வளர்ந்த பாக்தாத், 1258இல் மங்கோலியர் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டது. மறுநிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் செழித்த பாக்தாத் 1401இல் தைமூரால் கைப்பற்றப்பட்டது. 1508இல் பாரசீகத்தின் சஃபாவித்களால் கைப்பற்றப்பட்ட பாக்தாத், 1538இல் ஒட்டோமான்களின் ஆதிக்கத்திற்குட்பட்டது. ஒட்டோமான் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின், 1920இல் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பாக்தாத், 1932இல் இராக் முடியரசு உருவானபோது அதன் தலைநகரமாகியது. 2003இல் அமெரிக்கா நுழைந்தபின், பாக்தாத்தில் பட்டபாடு உலகறிந்தது!