1794 - அமெரிக்கா வுக்கும் இங்கி லாந்துக்குமிடையே ‘ஜே ஒப்பந்தம்’ கையெழுத்திடப் பட்டது. பிரெஞ்சுப் புரட்சியின் போது, பிரான்சுக்கும் பிற நாடு களுக்குமிடையே ஏற்பட்ட போர்களின் ஒரு பகுதியாக, 1793இல் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் போர் ஏற்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளிலிருந்த பிரான்சின் குடியேற்றங் களிலிருந்து சரக்குகளை ஏற்றிச்சென்ற சுமார் 250 அமெரிக்க வணிகக் கப்பல்களை இங்கிலாந்து கைப்பற்றிக்கொண்டது டன், இக்கப்பல்களிலிருந்த மாலுமிகளை இங்கிலாந்தின் போர்க்கப்பல்களில் வலுக்கட்டாயமாகப் பணியாற்றச் செய்தது. ஏற்கெனவே, சரியாக வரையறுக்கப்படாத கனடா எல்லைப்பகுதியில் ஃபர்ஸ்ட் நேஷன் என்ற பழங்குடியினருக்கு, இங்கிலாந்து ஆயுதங்கள் வழங்கி அமெரிக்காவுக்கு இடையூறு செய்துகொண்டிருந்ததால், இங்கிலாந்தின்மீது போர் தொடுக்கவேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், இங்கிலாந்துடனான வணிகம் முக்கியம் என்று கருதிய அமெரிக்கக் குடியரசுத்தலைவர் வாஷிங்டன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ஜே-யை இங்கிலாந்துக்குப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார்.
அவர் உருவாக்கிய நட்புறவு, வணிகம், கடற்பயணங்கள் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம், அவர் பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது. பல்வேறு சிக்கல்களில் அமெரிக்காவுக்குச் சாதகமான முடிவுகளை உருவாக்கிய இந்த ஒப்பந்தத்தின்மூலம், கைப்பற்றப்பட்ட 250 கப்பல்களுக்காக 1.16 கோடி டாலர்களை அமெரிக்கா பெற்றது. விடுதலைப்போருக்கு முந்தைய கடன்களுக்காக இங்கிலாந்து 6 லட்சம் பவுண்டுகளைப் பெற்றாலும், அமெரிக்காவின் பல பகுதிகளில் செய்திருந்த ஆக்கிரமிப்புகளிலிருந்து வெளியேறியதுடன், எல்லை களை வரையறுக்க இரண்டு கூட்டுக்குழுக்களும் உருவாக்கப்பட்டன.
(இவை கூடவேயில்லை என்பது தனிக்கதை!) அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஒன்றை யொன்று முதன்மை வணிக உறவு நாடாக அங்கீகரித்து, பல்வேறு சலுகைகளுடன் வணிகத்தை மேம்படுத்த ஒப்புக் கொண்டன. கைமாறாக, பிரான்சின்மீதான இங்கிலாந்தின் கடற்கொள்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. ஆனாலும், அமெரிக்க மாலுமிகளை வலுக்கட்டாயமாக இங்கிலாந்துக் கடற்படையில் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான உறுதிமொழிகளை ஜே-யால் பெறமுடிய வில்லை. இதுவே, 1812இல் இங்கிலாந்துடன் போர் ஏற்படக் காரணமாயிற்று என்பதுடன், அந்தப் போரே, எல்லைப் பிரச்சனைகளுக்கும் முடிவுகட்டியது. அமெரிக்க விடுதலைப்போரில் துணைநின்று, அதற்காக இங்கிலாந்து டன் போரிலும் ஈடுபட்ட பிரான்சுடன் 1778இல் கூட்டணி ஒப்பந்தமே செய்யப்பட்டிருந்தபோதும், வணிகம்தான் முக்கியம் என்ற நிலையை அமெரிக்கா எடுத்தது கவனிக்கத் தக்கது. விரிவிதிப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் போராடி, விடுதலையடைந்த அமெரிக்கா, விடுதலைக்குப் பின், போர்களைத் தவிர்த்தது, போர்களில் ஈடுபட்டது ஆகிய இரண்டுமே வணிகத்தின் (பொருளாதார) வளர்ச்சியை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டுதான்!