tamilnadu

img

இந்நாள் நவம்பர் 12 இதற்கு முன்னால்

1912 - அண்டார்டிக் பகுதியில் முதன்முதலாகத் தொல்லுயிர் படிவங்களைக் கண்டுபிடித்த ராபர்ட் ஃபால்கன் ஸ்காட்,  அவரது குழுவினர் ஆகியோரின் உயிரற்ற உடல்கள் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அண்டார்டிக்கின் பகுதிகளை அறியவும், அறிவியல் ஆய்வுகளை  மேற்கொள்ளவும் 1910இல் மேற்கொள்ளப்பட்ட டெர்ரா நோவா பயணம் என்னும் இங்கிலாந்தின் அண்டார்டிக் பயணத்தின் தலைவராக ஸ்காட் செயல்பட்டார். இவர் ஏற்கெனவே 1901இல் மேற்கொள்ளப்பட்ட டிஸ்கவரி பயணம் என்னும் இங்கிலாந்து தேசிய அண்டார்டிக் பயணத்திலும் பணியாற்றியிருந்தார். அப்பயணத்தின் வெற்றிக்குப்பின் கப்பல் தளபதி யாக உயர்த்தப்பட்டிருந்தார். இப்பயணத்தில் பயன்படுத்தப்பட்ட டெர்ரா நோவா கப்பலின் பெயராலேயே இப்பயணம் குறிப்பிடப்படுகிறது. டிஸ்கவரி பயணம் ராயல் ஜியாகரஃபிக்கல் சொசைட்டியால்(அரச புவியியல் கழகம்) அதன் மேற்பார்வை மற்றும் நிதியுடன் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், மீண்டும் அண்டார்டிக்குக்குப் பயணிக்க முழுமையான நிதியுதவி யைச் செய்ய புவியியல் கழகம் தயாராக இல்லாத நிலையில், நிதி திரட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இதற்கு, கடற்படையும், புவியியல் கழகமும் உதவின. ஸ்காட்டைப் பொறுத்தவரை இந்தப் பயணத்தில் அறிவியல் ஆய்வுகளைவிடவும், தென் துருவத்தை அடைவதும், முதலில் தென் துருவத்தை அடைந்த பெருமையை இங்கிலாந்துக்குத் தருவதும் முக்கிய நோக்கமாக இருந்தன.

1912 ஜனவரி 17இல் ஸ்காட் மற்றும் அவர் அணியின் நான்கு உறுப்பினர்களும் தென் துருவத்தை அடைந்தபோது, அவர்களுக்கு 34 நாட்கள் முன்பாகவே நார்வேயின் ருவால்ட் அமுண்ட்சென்-னும் அவர் அணியினரும் தென் துருவத்தை அடைந்து, ஸ்காட்டை இரண்டாவதாக்கிவிட்டிருந்தனர். தென் துருவத்திலிருந்து திரும்பும் பயணத்தில், எஞ்சிய பயணக்குழுவினர் தங்கியிருந்த முகாமிலிருந்து இவர்களுக்கு உதவிக்கு வரவேண்டிய நாய்க்குழுக்களைச் சந்திக்க முடியாமற்போனது. இதனால், முகாமிலிருந்து 240 கி.மீ. தொலைவில் ஐவரும் உயிரிழந்தனர். உரிய நேரத்தில் இக்குழுவினர் திரும்பி வராததால் தேடும் பணிகள் தொடங்கப்பட்டு, நவம்பர் 12இல் அவர்கள் தங்கியிருந்த கூடாரமும், அதற்குள் உறைந்த நிலையில் ஐவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களது உடல்களுடன், 25 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய தாவரங்களின் படிவங்கள் உள்ளிட்ட, அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களும் கிடைத்தன. இவையே அண்டார்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தொல்லுயிர்ப் படிவங்கள் என்பதுடன், அண்டார்டிக் பகுதியும் வனங்கள் நிறைந்ததாக இருந்தது என்பதை உணர்த்தும் ஆதாரங்களாகவும் அமைந்தன.

- அறிவுக்கடல்