tamilnadu

img

இந்நாள் ஜுன் 24 இதற்கு முன்னால்

1932 - சயாம் (தாய்லாந்து) வரலாற்றின் திருப்புமுனையான, ரத்தமில்லாத ‘1932 புரட்சி’, தாய்லாந்தின் 800 ஆண்டுகால ‘முழுமையான முடியாட்சியை’ முடிவுக்குக்கொண்டுவந்து, ‘அரசியல்சட்ட முடியாட்சியை’ உருவாக்கியது. 1782இல் சயாமில், முதலாம் ராமா அரசரால் சாக்ரி மரபின் ஆட்சி உருவானது. சயாமின் ஒருசில பகுதிகளில் இங்கிலாந்தும், பிரான்சும் ஆதிக்கம் செலுத்தினாலும்கூட, மற்ற தென்கிழக்காசிய நாடுகளைப்போல, சயாம் எந்த மேற்கத்திய நாட்டின் ஆதிக்கத்திற்கும் ஆட்படவில்லை. மேற்கத்திய நாடுகளால், கீழை நாடுகள் நாகரிகமடையாத, அறியாமையுடைய, தாழ்ந்த நாடுகளாகச் சித்தரிக்கப்பட்டதால், தங்கள் நாட்டை நவீனமயமாக்குவதற்காக, எளிய மக்களின் பிள்ளைகள் உட்பட ஏராளமானவர்களை மேற்கத்திய நாடுகளில் கல்விபயிலச் செய்தனர் நான்காம், ஐந்தாம் ராமா அரசர்கள். அவ்வாறு கல்விகற்றுத் திரும்பியவர்களுக்கு, தங்கள் நாட்டின் நிலை மிகவும் மோசமானதாகத் தெரிந்தது. இங்கிலாந்தில் பட்டம் பெற்றவரான ஆறாம் ராமா அரசர் வஜ்ரவூத், சயாமின் முதல் பல்கலைக்கழகத்தைத் தொடங்கியதுட்பட, பல புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் ஒன்று, எளிய மக்களை அதிகாரமிக்க அரச பதவிகளில் அமர்த்தியது. இது, அரச குடும்பத்தினரை எரிச்சலுக்குள்ளாக்கியது. அவர் மறைவுக்குப்பின் அவரின் சகோதரர் பிரஜாதிபோக், ஏழாம் ராமாவாக முடிசூடினார். இவர், ஐந்தாம் ராமாவின் கடைசி(33ஆவது) மகன்(77 குழந்தைகளில் 76ஆவது)! இவ்வளவு இளவரசர்களின் ஆடம்பர செலவுகளால் அரசின் கருவூலம் காலியாக இருந்தது. மக்கள் நலப்பணிகளுக்காக செல்வந்தர்களுக்கு அரசர் வரிவிதித்ததை அரச குடும்பத்தினரே விரும்பவில்லை. மக்களாட்சியை அமைக்க பிரஜாதிபோக் விரும்பினாலும், பெரும்பகுதி மக்களுக்குக் கல்வியறிவில்லாததால் பயனிருக்காது என்பதால், நிர்வாக அவையை உருவாக்கினார். ஆனால், அதனை ஆளும் வர்க்கத்தினரே ஆக்கிரமித்ததுடன், ஏற்கெனவே பதவியிலிருந்த எளியோரையும் வெளியேற்றினர். தங்கள் நாட்டைச் சீரமைக்க, மேற்கத்திய நாடுகளில் படித்துக்கொண்டிருந்தவர்கள் 1927இல் உருவாக்கிய அமைப்பு, கானா ராட்சடான் கட்சியாக(மக்கள் கட்சி) உருவாகி இப்புரட்சியை நடத்தியது. ஏற்கெனவே, மக்களாட்சி அமைக்க விரும்பியவரான பிரஜாதிபோக், அரசியல் சட்ட முடியாட்சியை ஏற்றுக்கொண்டதால், அன்று மாலையே சயாம் இயல்புநிலைக்குத் திரும்பியது!