1958 - அமெரிக்காவில், ‘தேசிய வானூர்தியியல், விண்வெளி சட்டம்’ நிறைவேற்றப்பட்டு, ‘தேசிய வானூர்தியில், விண்வெளி நிர்வாகம்(நாசா)’ தொடங்கப்பட்டது. பன்னாட்டு புவி-இயற்பியல் ஆண்டாக அறிவிக்கப்பட்டிருந்த 1957 ஜூலை 1 - 1958 டிசம்பர் 31 காலகட்டத்தில், புவியைச் சுற்றும் சிறிய செயற்கைக்கோள்களை ஏவத் திட்டமிட்டு வருவதாக 1955இல் அமெரிக்கா அறிவித்தது. 1957 அக்டோபர் 4இல் எவரும் எதிர்பாராதவண்ணம், உலகின் முதல் செயற்கைக்கோளாக ஸ்புட்னிக்-1ஐ சோவியத் ஒன்றியம் வெற்றிகரமாக ஏவி, புவியின் தாழ்வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. ‘ஸ்புட்னிக் நெருக்கடி’ என்றே அழைக்கப்படுமளவுக்கு சோவியத்தின் தொழில்நுட்ப முன்னேற்றம்குறித்து மேற்கத்திய நாடுகளிடையே அச்சம் ஏற்பட்ட நிலையில், லைக்கா என்ற நாயைச் சுமந்து, விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரினம் என்ற பெருமையுடன், 1957 நவம்பர் 3இல் ஸ்புட்னிக்-2ஐயும் சோவியத் ஒன்றியம் ஏவிவிட்டது. விண்வெளி ஆய்வில் பின்தங்கியிருப்பதை ஏற்க முடியாத நிலையில், தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்புடன் 1957 டிசம்பர் 6இல் ஏவப்பட்ட வேன்கார்ட்-டிவி3 ராக்கெட், சில நொடிகளில் வெடித்துச் சிதறியது அமெரிக்காவுக்கு மேலும் அவமானமாகிப்போனது. 1958 பிப்ரவரி 1இல் எக்ஸ்ப்ளோரர்-1ஐ தங்களது முதல் செயற்கைக்கோளாக அமெரிக்கா ஏவியது. அதுவரை, ராணுவத்தைச் சேர்ந்த ‘வானூர்தியியலுக்கான தேசிய ஆலோசனைக்குழு(நாகா)’ என்பதுதான் விண்வெளிப் பயணம்குறித்த ஆய்வுகளுக்குப் பொறுப்பாக இருந்தது. சோவியத்திலும் விண்வெளி ஆய்வுகள் ராணுவத்திடம்தான் இருந்தாலும், சோவியத் அடைந்த முன்னேற்றம், ராணுவத்தின் பங்களிப்பு மட்டும் போதாது என்று அமெரிக்காவை எண்ணச் செய்ததாலேயே, நாசா தொடங்கப்பட்டது. அப்போது, இத்துறையில் நாசா ஊழியர்கள் மட்டுமின்றி தனியார் ஒப்பந்ததாரர்களின் கண்டுபிடிப்பும் அரசுக்கே சொந்தம் என்று காப்புரிமை சட்டம் திருத்தப்பட்டு, பின்னர், தனியாரை ஊக்குவிக்க 1984இல் இயற்றப் பட்ட சட்டத்தின்மூலம் மாற்றப்பட்டது. பின்னாளில், விண்வெளி ஆய்வுகள் மட்டுமின்றி, வணிகப் பொருட்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதிலும், கண்டுபிடிப்பாளர்களுக்கு உதவுவதிலும் நாசா ஈடுபடத் தொடங்கியது. மெமரி ஃபோம், போர்ட்டபிள் கார்ட்லெஸ் வாக்குவம் க்ளீனர், லாசிக் கண் சிகிச்சை உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் இவ்வாறு நாசாவால் உருவாக்கப்பட்டுள்ளன.