1927 - இந்தியாவில் பொதுமக்களுக்கான வானொலி ஒலிபரப்பு முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு, 1923இலிருந்து, ‘பம்பாய் மாகாண வானொலி மன்றம்’ முதலான தனிப்பட்ட வானொலி மன்றங்கள், தங்கள் உறுப்பினர்களுக்கு ஒலிபரப்புச் செய்துகொண்டிருந்தன. ‘இந்தியன் ப்ராட்காஸ்ட்டிங் கம்பெனி லிமிட்டெட்’ என்ற தனியார் நிறுவனம் 1927 ஜூலை 23 முதல் பம்பாயிலிருந்தும், ஆகஸ்ட் 26 முதல் கல்கத்தாவிலிருந்தும் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது. இந்த நிறுவனம் 1930 மார்ச் 1இல் மூடப்பட்டபோது, அதன் ஒலிபரப்புக் கருவிகளை (ஆங்கிலேய) அரசு வாங்கி, சோதனை முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒலிபரப்பை செய்வதற்காக, ‘இந்திய அரசு ஒலிபரப்புச் சேவை’ என்பதை ஏப்ரல் 1இல் தொடங்கியது.
1932 மே-யில் இச்சேவையினை நிரந்தரமாகத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டு, ஜூன் 6இல் அகில இந்திய வானொலி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பாரசீக, அரேபிய நாடுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் ஹிட்லர் மேற்கொண்ட பிரச்சாரங்களை முறியடிக்க, 1939 அக்டோபர் 1இல் (பாஷ்தூன் இனத்தவரின்) பஷ்தூ மொழியில் வெளிநாட்டு ஒலிபரப்பும் தொடங்கப்பட்டது. 1947இல் இந்தியா விடுதலை பெற்றபோது இருந்த 9 வானொலி நிலையங்களில் தில்லி, பம்பாய், கல்கத்தா, சென்னை, லக்னோ, திருச்சிராப்பள்ளி ஆகிய ஆறும் இந்தியாவிலும், லாகூர், பெஷாவர், டாக்கா ஆகிய மூன்றும் பாகிஸ்தானிலும் அமைந்திருந்தன. அக்காலத்தில் இந்தியாவில் 2,75,000 வானொலிப்பெட்டிகள் பயன்பாட்டிலிருந்தன.
இலங்கை வானொலியின் சேவைகள் மக்களை அதிகம் கவர்ந்ததால், அதனுடன் போட்டியிடுவதற்காக 1957இல் விவித் பாரதி தொடங்கப்பட்டது. அகில இந்திய வானொலியால் 1959இல் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பு, 1976 ஏப்ரல் 1இல் தூர்தர்ஷன் என்ற தனி நிறுவனமாக்கப்பட்டது. பண்பலை ஒலிபரப்பு 1977ஜூலை 23இல் முதன்முறையாகச் சென்னையில் தொடங்கப்பட்டு, 1990களில் பரவலானது. 1998 பிப்ரவரி 25இல் புதுதில்லியில் தொடங்கப்பட்ட நியூஸ்-ஆன்-ஃபோன் சேவை தற்போது சென்னை, மும்பை, ஹைதராபாத், இந்தூர், பாட்னா, பெங்களூர் ஆகிய நகரங்களில் வழங்கப்படுகிறது. டிடிஎச் மூலம் பெறக்கூடிய செயற்கைக்கோள் வானொலி ஒலிபரப்பையும் அகில இந்திய வானொலி வழங்குகிறது.