1937 - ஜெர்மனியின் பயணிகள் வான்கப்பல் ஒன்று, அமெரிக்காவின் நியூஜெர்சியில் வெடித்துச் சிதறியதில் 36 பேர் பலியாயினர். ஹிண்டன்பர்க் விபத்து என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு, பயணிகள் போக்குவரத்துக்காக வான்கப்பலைப் பயன்படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவந்ததில் முக்கியப் பங்குவகித்தது. வான்கப்பல் என்பது காற்று நிரப்பப்பட்ட, கட்டுப்படுத்தக்கூடிய பலூன்களாகும். இவையே முதலில் கட்டுப்படுத்தத்தக்க வான் பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. வான் பறப்பியலின் தந்தை என்று குறிப்பிடப்படும் ஃப்ரான்செஸ்கோ டெர்சி, 1670இல் வானில் பறக்கும் காற்றுக் கப்பல் பற்றிக் குறிப்பிட்டிருந்ததே இதைப்பற்றிய முதல் கருதுகோள் ஆகும். 1783இல் பிரெஞ்ச் ராணுவத்தின் ஜீன் மியூஸ்னியர், நடைமுறையில் சாத்தியமான ஒரு பறக்கும் கப்பலின் வடிவமைப்பை வெளியிட்டார். வான் கப்பலில் கையால் இயக்கும் உந்து அமைப்பைக் கண்டுபிடித்த ஜீன்பியரி ப்ளாங்கார்ட், 1785இல் அதன்மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்துகாட்டினார். 19ஆம் நூற்றாண்டில் வான்கப்பலில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டன. 1852இல் ஹென்றி கிரிஃபார்ட், முதல் என்ஜின் பொருத்தப்பட்ட வான்கப்பலை உருவாக்கி, 27 கி.மீ. பறந்துகாட்டினார். 1872இல் பால் ஹேன்லீன், முதல் உள்ளெரி என்ஜின் பொருத்தப்பட்ட வான்கப்பலை உருவாக்கியதுடன், நிலக்கரியைப் பயன்படுத்திக் காற்றைச் சூடாக்கிப் பறந்தார். கேஸ்டன் டிஸ்ஸாண்டியர் 1883இல் முதல் மின்சார மோட்டார் பொருத்தப்பட்ட வான்கப்பலை உருவாக்கினார். முதல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட வான்கப்பல் 1884இல் பிரெஞ்ச் ராணுவத்தால் உருவாக்கப்பட்டது. வான்கப்பல்கள் பலூனில் சூடான காற்று அல்லது எடை குறைந்த வாயுக்களை நிரப்பிப் பறக்கச்செய்யப்படுகின்றன. உறுதியற்ற, பாதியளவு உறுதியான, உறுதியான என்ற மூன்று வகைகளில் இவை உள்ளன. உறுதியற்றது என்பது நிரப்பப்படும் காற்றால் மட்டுமே வடிவத்தைப்பெறுவதாகவும், உறுதியானது, நிலையான வடிவமைப்புடன் உட்புறம் காற்றுப் பைகள் கொண்டதாகவும் உள்ளது. 1930களில் ஏற்பட்ட பல விபத்துகளும் வான்கப்பல்கள்மீதான நம்பிக்கையைக் குறைத்திருந்த நிலையில், இந்த விபத்து அதனை முடிவுக்குக்கொண்டுவந்தது. தற்போது விளம்பரம், சுற்றுலா, ஆய்வு முதலான ஒரே இடத்தில் அதிகநேரம் மிதக்க வேண்டிய பணிகளுக்கு மட்டுமே வான்கப்பல் பயன்படுத்தப்படுகிறது.