1939 - அமெரிக்காவின் 147 ஆண்டு நடுநிலைக்கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்த ‘1939இன் நடுநிலைச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. ஃப்ரான்சுடனான ராணுவக் கூட்டணியின்றி, அமெரிக்க விடுதலைப்போரில் இங்கிலாந்தை வென்றிருக்கவே முடியாது என்றாலும், அடுத்த பத்தாண்டுகளுக்குள்ளாகவே, 1792இல் இங்கிலாந்துக்கும் ஃப்ரான்சுக்கும் போர் ஏற்பட்டபோது, நடுநிலை வகிப்பதாக அறிவித்த ஜார்ஜ் வாஷிங்டன், குடியரசுத்தலைவர் பதவிக்காலம் முடிந்து வெளியிட்ட விடைச்செய்தியிலும், யாருடனும் கூட்டணியின்றி இருப்பதே அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உகந்தது என்றே குறிப்பிட்டிருந்தார்.
முதல் உலகப்போரின்போதுகூட, அமெரிக்க வணிகக்கப்பல்களை ஜெர்மெனி மூழ்கடித்ததைத் தொடர்ந்து, முதலில் ஜெர்மெனிமீதும், பின்னர் ஆஸ்திரிய-ஹங்கேரிமீதும் அமெரிக்கா போர் தொடுத்ததே தவிர, எந்த அணியிலும் இல்லை என்ற நிலையையே இறுதிவரை பின்பற்றியது. ஆனாலும், முதல் உலகப்போரில் அமெரிக்கா இறங்கியதற்குக் காரணம் ஆயுத வணிகர்களும், (தனியார்) வங்கிகளும்தான் என்ற அமெரிக்க மக்களின் எண்ணமே ‘மரண வியாபாரிகள்’ என்ற சொல்லாடல் உருவாகக் காரணமானதுடன், அதைப்பற்றி விசாரிக்க 1934இல் நை குழு என்பதும் அமைக்கப்பட்டது. இவற்றால், 1935இல் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே பிணக்குகள் ஏற்பட்டவுடனேயே, எந்த அணியிலும் இருக்கப்போவதில்லை, போரிட்டுக்கொள்ளும் நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்பதில்லை என்ற நடுநிலைச் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியதுடன், 1936, 1937இலும் புதுப்பித்தது. போரினால் ஏற்றுமதி பாதிக்கப்பட, ஏற்கெனவே, முதல் உலகப்போரில், அமெரிக்காவின் வணிகக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதாலேயே போரில் இறங்கவேண்டியதானதால், பணத்தைக் கொடுத்து பொருளைத் தங்கள் பொறுப்பில் எடுத்துச் செல்லும் நாடுகளுடன் வணிகம் செய்யலாம் என்ற ‘கேஷ்-அண்ட்-கேரி’ கொள்கையை குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அறிவித்தார்.
நடுநிலை வகிக்கும் நாடுகள் ஆயுதங்களை வாங்கி, போரிடும் நாடுகளுக்கு விற்க முடியும் என்பதால், போரிடும் நாடுகளுக்கே விற்கலாம் என்று கேஷ்-அண்ட்-கேரி கொள்கையை விரிவாக்கி, நடுநிலைக்கொள்கையின் முடிவைத் தொடங்கியதுதான், 1939இன் நடுநிலைச் சட்டம். 1941 டிசம்பரில் முத்துத்துறைமுகம் தாக்கப்பட்டபின்னரே அமெரிக்காவும் போரில் குதித்தது என்பதால், அதுவரை ஆயுதங்கள் விற்று, உலகின் மிகக் கணிசமான தங்கத்தைத் தங்கள் கையிருப்பாக்கிக்கொண்டதே, டாலர் உலக நாணயமாகக் காரணமாகியது. முதல் உலகப்போரில் உலக நாட்டாமை பிம்பமும் (இத்தொடரில் 2018 ஏப்ரல் 1), இரண்டாம் உலகப்போரில் உலகத்தின் நாணயம் என்ற ஆதிக்கத்தையும் பெற்றதன்மூலம், உலகப்போர்களின் உண்மையான பலனை அமெரிக்காவே அடைந்தது. போரிடும் நாடுகளுக்கு சில இரவல்களைக்கொடுத்து, அந்நாடுகளில் ராணுவ தளங்களைக் குத்தகைக்குப் பெறக்காரணமான, 1941 மார்ச்சில் இயற்றப்பட்ட இரவல்-குத்தகைச் சட்டம், அமெரிக்காவின் நடுநிலைக்கொள்கையின் முடிவுரையாக அமைந்தது!
அறிவுக்கடல்