tamilnadu

img

பரவசமூட்டும் பழவேற்காடு!

“நான்கு புறமும் நீர் சூழ நடுவில் தீவுபோல் அமைந்திருக்கும் அந்த ஊர் ஓர் அருங்காட்சியகம் என்றால் அது மிகையல்ல. ஒரு திசையில் கடலின் அலைகள் அதிக அளவில் நிலைத்து நிற்கும் காட்சியும், இடைவிடாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஓசையும் மூன்று திசைகளிலும் பரந்து விரிந்த நீலமும், நீர்ப்பிடிப்பும் மனதை மயக்கும் காட்சிகளாகும்”.பரந்து விரிந்து கிடக்கும் அந்த ஏரி, “வா வா’’ என்று மனதை பிடித்து இழுக்கிறது. நள்ளிரவு மீன்பிடிக்கச் சென்று படகுத்துறைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் சில மீனவர்கள். சிலர் இப்போது தான் தொழிலுக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கி றார்கள். படகுகளிலிருந்து இறக்கப்பட்ட மீன்களை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் வியாபாரிகளும் மக்களையும் திரளாக காணமுடிந்தது. சோழமண்டல கடற்கரையில் அமைந்துள்ள கண்கவர் சிறு நகரம் ‘புலிக்காட்’ என்று அழைக்கப்படும் பழவேற்காடு”.

பழவேற்காடு ஏரி என்றதும் நினைவுக்கு வருவது படகு சவாரி. சென்னையின் வடக்கே சுமார் 60 கி.மீ தூரத்திலுள்ள பழவேற்காடு போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என மாறுபாடுகள் நிறைந்த கலாச்சார பாரம்பரியத்தை கொண்டதாகும். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு ஏரியான பழவேற்காட்டிற்கு ஆண்டுதோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.இங்கு கிடைக்கும் மீன், இறால், நண்டு சுவை மிக்கது என்பதால் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

மனசுக்கு இதமாக...

வங்கக் கடலில் கலக்கும் இந்த ஏரியின் பெரும்பான்மையான பகுதி ஆந்திராவுக்கு சொந்தமானவை என்றாலும் சிறு பகுதி தமிழகத்திற்கு சொந்தமாகும். இருந்தாலும் எந்த ஒரு மாநிலமும் தங்களுக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாட முடியாது. மழைக் காலங்களில் வங்கக் கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கும் பகுதியாகவும், உபரி நீரை கடலுக்கு அனுப்பும் பாதையாகவும் அமைந்திருக்கிறது பழவேற்காடு ஏரி. அதன் முகத்துவாரத்தில் ஆறு மணி நேரத்திற்கு ஒரு தடவை சுழற்சி முறையில் ஏரித் தண்ணீர் கடலுக்கும் கடல் தண்ணீர் ஏரிக்கும் விட்டு விட்டு வரும் சிறப்பு அம்சங்களை படகோட்டிகள் விளக்குகின்றனர்.

உள்ளம் கொள்ளை போகுது!

ஒரு காலைப் பொழுதில் பழவேற்காட்டில் இறங்கியதும் மீன் பிடித்தளம் நம்மை வரவேற்கிறது. இந்த மீன் பிடி தளத்தில் இருந்து படகில் சவாரி செய்தால் சுமார் 30 நிமிடப் பயணத்தில் கடலும் ஏரியும் இணையும் பகுதியான முகத்துவாரத்தையொட்டி ஆங்காங்கே அமைந்துள்ள மணல் திட்டுகள் மனதை வெகுவாக கவர்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவில் இருந்து சென்னை வழியாக  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வரை சுமார் 796 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்ட நீர்வழிப் பாதை (பக்கிங்காம் கால்வாய்), சிறிஹரிகோட்டாவின் வட, தென் முனைகள் வங்கக் கடலோடு பழவேற்காடு ஏரியின் மேற்கே அகன்ற நீர்க் கோடாய் கலப்பதை ஒருசேர பார்ப்பதும், சற்று தூரத்தில் ஜாலியாக ஜில்லென்று ஒரு குளியல் போடுவதும் சுற்றுலா பயணிகளை இன்பத்தில் ஆழ்த்துகிறது.

மக்கள் பாலம்!

ஏரிக்கும் கடலுக்கும் இடையே லைட் அவுஸ் குப்பம், கரிமணல், அரங்க குப்பம் என ஏராளமான தீவுகள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் படகின் மூலம் தான் ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருந் தனர். அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஏரியின் குறுக்கே அமைக்கப்பட்ட உயர்மட்ட பாலம், கிராம மக்களையும் சுற்றுலா பயணிகளையும் வெகு சுலபமாக இணைக்கும் ‘மக்கள் பாலமாக’ அமைந்திருக்கிறது.ஏரியின் அருகிலிருந்து சுமார் 26 மைல் சுற்றளவுக்கு ஒளி வீசிக் கொண்டிருக்கும் கலங்கரை விளக்கம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. தொடர்ந்து இதனை இரண்டு முறை புதுப்பித்துள்ளனர். இருப்பினும் பழமையான கட்டிடம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பவேண்டியுள்ளது.

பழமைக்கு சாட்சி...

இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை சுமந்து கொண்டிருக்கும் கட்டிடங்கள் டச்சுக்காரர்களும் போர்த்துகீசியர்களும் ஆங்கிலேயர்களும் விட்டுப்போன அடையாளங்கள் ஆங்காங்கே சாட்சியாக மிஞ்சியிருக்கின்றன. பழவேற்காடு பகுதியில் சில ஆண்டுகளே ஆட்சி செய்த டச்சுக்காரர்களின் பெருமையையும் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் பழமையான பள்ளிவாசல், தேவாலயம், கல்லறைகளை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது.பழவேற்காடு செல்லும் வழியிலும் ஏரிக்கரை அருகிலும் கூட்டம் கூட்டமாய் இரை தேடிக் கொண்டிருக்கும் அழகிய பறவைகள் மனதிற்கு மகிழ்வை தருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக் கான புலம்பெயர் பறவைகள் இந்த ஏரிக்கும் பழவேற்காடு சரணாலயத்திற்கும் வருகின்றன. பலதரப்பட்ட பறவை இனங்கள் இந்த ஏரிக்கு வந்தாலும் இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு நிறம் கொண்ட இறகுகள், நீண்ட கால், கழுத்துக்களுடன் உயரமான நீளமுள்ள பறவைகளே முக்கிய இனமாகும். ஆனால் தற்போது நிலவும் வறட்சி யால் பறவைகள் மிக மிக குறைவாகவே காணப்படுகிறது.

இந்தியாவின் கவுரவம்...

அங்குள்ள மீனவர் ஒருவரிடம் கேட்டபோது“இந்தியாவின் கவுரங்களில் ஒன்று சிறீஹரிகோட்டா. அந்த ஏவுதளம் பழவேற் காடு ஏரியின் மடியில்தான் இருக்கிறது. இந்த ஏவுதளத்திற்கு நிலத்தை கொடுத்தவர்கள் நாங்கள். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து வெளியேற்றப் பட்டோம். எங்களுக்கு பழவேற் காடு ஏரியின் கரையோரம் இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு தான் வாழ்ந்து வருகிறோம். பழவேற்காடு சுற்றிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அனைவருக்கும் இந்த ஏரிதான் வாழ்வாதாரம்.ஆந்திராவிலிருந்து வரும் சொர்ணமுகி, கலங்கி தமிழகத்தில் ஆரணி, கொசஸ்தலை ஆகிய ஆறுகள் பழவேற்காட்டில் கலக்கின்றன. இந்த ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரக் கோரி அரசிடம் பல முறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. எங்கள் மீனவ கிராம மக்கள் தங்களின் சொந்த பணத்தில் சிறிதளவு தூர் வாரினோம்” என்றார்.பழவேற்காடு தீவைப் பற்றி தெரிந்துகொள்ள தேடிய போது நான்கு புறம் நீர் சூழ இந்தியாவின் காலனி ஆதிக்க வரலாற்றுச் சுவடுகளை தனக்குள் சுமந்துகொண்டு காலத்தின் மடியில் அமைதியாக அமர்ந்து இருப்பதை அறிய முடிந்தது. இயற்கையான அழகு, மனதை மயக்கும் பறவையினங்கள், பாரம்பரிய கட்டடங்கள், வளமான கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றால் சுற்றுலா பயணிகளுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் விருப்பமான இடமாக விளங்குகிறது பழவேற்காடு.


தொகுப்பு: சி.ஶ்ரீராமுலு 

படங்கள்: பெ. ரூபன்


அச்சம் தரும் பயணம்...

கடந்த 2011ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று படகு சவாரி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 21 பேருடன் படகோட்டியும் பலியான கோர சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதனை அடுத்து படகு சவாரிக்கு மாநில அரசு தடைவிதித்தது. இந்த சம்பவம் நிகழ்ந்து 7 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. தடையை விலக்கி சுற்றுலாவிற்கு வரும் உள்நாட்டு, வெளி நாட்டு பயணிகள் படகு சவாரி செய்வதற்கு அரசு சார்பில் எவ்வித ஏற்பாடும் இல்லை. விளைவு! தனியார் படகை நாடிச் செல்கிறார்கள். அந்த சவாரியின் போது பாதுகாப்பு கவசம் இல்லாமல் பயணிப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இம் மாதம் 12 ஆம் தேதி படகு சவாரிக்கு 10-க்கும் மேற்பட்டோரை அழைத் துச் சென்றபோது 2 படகுகள் ஒன்றோடொன்று மோதியதில் படகு கவிழ்ந்ததில் ஒரு பெண் பலியானார். 

முகம் சுளிப்பு...

மிகப்பெரிய சுற்றலா தளங்களில் ஒன்றான பழவேற்காட்டில் படகு குழுமம் அமைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீர், உணவு, தங்கும் வசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க தமிழக அரசும், வனத்துறையும் சுற்றுலாத் துறையும், மாவட்ட நிர்வாகமும் அக்கறை காட்டாமல் தடையை மீறி படகு சவாரி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை மட்டும விடுப்பது “காலைக் கடிக்கும் செருப்பை மாற்று வதற்கு மாறாக காலை வெட்டிக் கொள்ளும்” கதையாக அரசின் நடவடிக்கை உள்ளதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். 

தேவை படகு சவாரி

படகு சவாரியை தடுக்க கண்காணிப்புக் குழு ஏற்படுத்துவதை கைவிட்டு மீனவர்கள் மற்றும் படகோட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி படகு சவாரி பயணிகளின் பாதுகாப்பு, கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்காக அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. முட்டுக்காடு, பிச்சாவரம் படகு குழுமங்களில் பாதுகாப்பு கவசம் அணிந்து செல்லும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. விபத்தும் தவிர்க்கப்படுகிறது. அத்தகைய வசதி வாய்ப்புகளை பழவேற்காடு ஏரியிலும் ஏற்படுத்தி சிறப்பு பயிற்சி கொடுத்து மீண்டும் படகு சவாரியை துவக்க வேண்டும். அப்படி துவக்கும் பட்சத்தில் சுற்றுலாவிற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும். அரசுக்கும் வருவாய் கிடைக்கும். இங்குள்ள மீனவ மக்களின் வியாபாரமும் பெருகுவதோடு வாழ்க்கைத்தரமும் உயரும். இதற்கு, இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிறுணியம் பலராமன் முன்முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதே பழவேற்காடு வணிகர்கள் மற்றும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.