இளம்பிள்ளை, ஏப்.20- இளம்பிள்ளை அருகே கே.கே.நகரில் 6 வயது சிறுமி, ஊரடங்கு உத்தரவால் முடங்கிக் கிடக்கும் முதியோர்களுக்கு உணவு வழங்க தனது உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ரூ. 2440
தொகையை வழங்கிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவது குறித்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதால் வயதான முதியவர்கள்,மாற்றுத்திறனாளிகள்,ஏழை எளிய மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். இதனை அடுத்து இடங்கணசாலை பேரூராட்சி பகுதியை சேர்ந்த நண்பர்கள் குழு சார்பில் தினந்தோறும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. அதனை அறிந்த கே.கே.நகர் மேற்கு செக்கார வட்டம் பகுதியைச் சேர்ந்த அருள்குமார் என்பவரின் மகள் தனுஷியா (6) தனது வீட்டில் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை ரூ. 2440 - உணவு வழங்க பயன்படுத்திக் கொள்ளுமாறு நண்பர்கள் குழுவினரிடம் கொடுத்தார். சிறுமியின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.