tamilnadu

img

ரூ.10 லட்சம் வரை நிபந்தனையின்றி கடன் வழங்குக!

சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திடுக! 

முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை,மே 28-  சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க  தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமி ழக முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

22 லட்சம் நிறுவனங்கள்

தமிழகத்தில் 22.21 லட்சம்  பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களும், 119 தொழிற்பேட்டைகளும், 5 மகளிர் தொழில்பூங்காக்களும் உள்ளன. சுமார்  1.4 கோடி பேர் இதன் மூலம்  வேலை வாய்ப்பு பெறுகின்றனர், தமிழக உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில்  சுமார் 40  சதவீதம் (MSME)பங்களிப்பு செலுத்து கிறது. ஊரடங்கிற்கு முன்னரே சிறு, குறு, நடுத்தரத்தொழில்கள் பாதிக்கப் பட்டிருந்தன. கொரோனா தொற்று  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேலும் மிகக்கடுமையாக  பாதித்துள் ளது. இது தமிழகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்திடும்; வேலையின்மை பிரச்சனையும் மிகவும் கடுமையாகிடும். எனவே, கீழ்க்கண்ட நடவடிக்கை கள் மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்க தமிழக அரசு மத்திய அரசை  வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

நிபந்தனையின்றி  கடன் வேண்டும்

சிறு, குறு தொழில் நிறுவனங்  களுக்கு உடனடியாக நிபந்தனை களின்றி 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க வேண்டும். ஓராண்டு காலத்திற்கு இந்த கடனுக்கு வட்டி  முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். அதன் பிறகு, வட்டியையும், அசலையும் வங்கிகள் வசூலித்துக் கொள்ளும் முறையில் ஆணைகள் வழங்கப்பட வேண்டும்.  இதைப்போன்று நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவர்களின் கடந்த கால விற்றுமுதலின் அடிப்படையில் கடன் வழங்குவதும் வட்டி சலுகைகளுடன் கடன் வழங்குவதும் உத்தரவாதப்படுத்த வேண்டும். மேற்கண்ட நிதிஆதாரத்தை வட்டி யில்லாத தவணை முறையில் ஏற்பாடு செய்கிறபோது, உடனடியாக சிறு, குறு, நடுத்தர  நிறுவனங்கள் தொழில் தொடங்கவும், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கி, அவர்களை தக்க வைத்து தொழிலை மீண்டும்  தொட ங்கி நடத்தவும் வாய்ப்பு ஏற்படும்.

ஜிஎஸ்டியை குறைத்திடுக!

சிறிய நிறுவனங்கள் ஜிஎஸ்டி  தொகையை செலுத்தி மூலப்பொருட் களை வாங்குகின்றன. பிறகு உற்பத்தி செய்யும் காலமும், விற்பனை செய்து அந்த பொருளுக்கான தொகையை பெறுவதற்கான காலமும் சேர்ந்து குறைந்தது மூன்று மாதத்திற்கு மேலாகி விடுகிறது. ஆனால் மாதம்தோறும் 18  சதம் அல்லது  24 சதம் வரை ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் சிறிய நிறுவனங்கள் தொழில் நடத்த முடியாமல் மூடும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றன. ஆகவே,சிறு மற்றும் குறு தொழில்களுக்கு முன்பு மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்பட்டது போல 5 சதவிகிதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசினை மாநில அரசு வற்புறுத்த வேண்டும்.

ரூ.5லட்சம் கோடி நிலுவை

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு 45 நாட் களுக்குள் பணம் வழங்கப்பட வேண்டும் என்று விதியிருந்தாலும் 100 நாட்களுக்கு மேல் பணம் தராமல் இழுத்தடிக்கும் நிலை உள்ளது. சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான  மத்திய அமைச்சர் நிதின் கட்காரி,  இவ்வாறு கொடுக்கப்பட வேண்டிய தொகை ரூ. 5 லட்சம் கோடி என்று தெரிவித்திருக் கிறார். எனவே, உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டு மென்றும், எதிர்காலத்தில் கறாராக 45 நாட்களுக்குள் இந்த தொகையினை கொடுக்க வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். சிட்கோ தொழிற்பேட்டையில் உற்பத்தியாகும் பொருட்களை கொள்முதல் செய்து, உடனடியாக அதற்கான தொகையை கொடுத்து தொழில்களை பாதுகாத்திட வேண்டும். சிட்கோ தொழிற்பேட்டையில் சிறு மற்றும் குறுந்தொழிலுக்காக கூட்டுறவு சொசைட்டி அமைத்திட வேண்டும்.

மின்கட்டணம் ரத்து செய்க!

சிறு, குறுந்தொழில்கள் இயங்காத இந்தக்காலத்திற்கு அவர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள நிலையான மின்கட்ட ணத்தை ரத்து செய்ய வேண்டும். வெளி மாநிலத்தில் இருந்து இது வரை 40 சதவீதம் பேர் வேலை செய்து வந்தனர்.  தற்போது பெரும்பாலும் அவர்கள் சொந்த மாநிலத்திற்கு சென்றுவிட்டதால், தொழில் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும். ஆகவே தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு  படிப்பு முடித்தவர்களை சிறு மற்றும் குறுந்தொழிலுக்கு நியமித்து, வேலை  வாய்ப்பை ஏற்படுத்த அரசு உடனடி யாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  அவர்களுக்கு, தொழில் திறன் ஏற்படுத்துவதற்கான பயிற்சியும் அளிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு காரணமாக தனி மனித  இடைவெளியை கடைப் பிடித்து தொழில் செய்ய வேண்டிய சூழலில் நேரங்களை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. இது போன்று பல காரணங்களால் பொருளாதார சுமை  தொழில் முனைவோர் மீது சுமத்தப் பட்டுள்ளது.  எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை ஏற்று மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக உள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.