tamilnadu

img

வண்டல் மண் எடுக்கும் திட்டத்தில் முறைகேடு

நாமக்கல், ஜூலை 12- குமாரபாளையம் வட்டம், களியனூர் அக்ரஹாரம் ஊராட்சி, எலையாம் பாளையத்தில் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள அக்ரஹாரம் ஊராட்சியில் எலையம்பாளையம் சர்வே எண் 104 பெரிய ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் முதலமைச்சர் குடி மரமாத்து  பணியின் மூலம் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தில் விவசாயிகளின் நிலங்களுக்கு பயன்படுத்துவதற்காக அரசு தற்போது அனுமதி வழங்கியது.  இந்நிலையில் எலையாம்பாளையம் ஏரியில் வண்டல் மண் அள்ளுவதற்கான அனுமதியை ஆளும் கட்சியினர் முக்கிய பிரமுகர்களுக்கு குமாரபாளையம் வட் டாட்சியர் வழங்கினார்.

இந்நிலையில் 7க்கும் மேற்பட்ட கனரக வாகனம் மூலம் 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரி கள் மூலம் ஒரு யூனிட் ரூ.250, ஒரு லாரி ரூ.1,500 வீதம் தினசரி சுமார் லட்சக்கணக்கில் கடந்த 5 தினங்களாக முறைகேடாக, காண்ட்ராக்ட் காரர்க ளுக்கும் விற்பனை செய்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தாமல் வேறு பணிகளுக்காகவும்  லாப நோக்கத்தோடு ஏறி மண் அள்ளப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து வண்டல் மண் முறைகேடாக திருடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென திங்களன்று குமாரபாளையம் வட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். அத னையும் வட்டாட்சியர் கண்டுகொள்ளாத நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், முறைகேடாக வண்டல் மண் எடுப்பவர்கள் மீதும், வாகனங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  

நடவடிக்கை எடுக்கப்படவில்லை என் றால் நாங்கள் அலுவலகத்தை விட்டு செல்ல மாட்டோம் என்று வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு முழக்கம் மீட்டனர். இதனை அறிந்த குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தேவி தலைமையிலான  காவல்துறையினர் வட்டாட்சியர் அலுவ லகம் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக, இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட  செயலாளர் பி.பெருமாள் தலைமை வகித்தார். பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.தனேந்திரன், தலைவர் ராமசாமி, வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் எம்.செந்தில், ஒன்றிய செயலாளர் எம்.மணிகண்டன், சிபிஎம் கிளைச் செயலாளர் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.