நாமக்கல், பிப்.4- நாமக்கல் தோட்டக் கலைத்துறை அலுவலகத்தில் சனியன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலர் ஆயுதப்படை அலுவலகம் செல்லும் வழியில், மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சனியன்று அதிகாலை 5 மணியளவில், அலுவலகத்துக்குள் இருந்து புகை எழுந்துள்ளது. இதனைக்கண்ட காவலாளி சிங்காரம் என்பவர், இதுகுறித்து நல்லிபாளையம் காவல் துறை உதவியுடன், நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து அலுவலகத்திற்குள் இருந்த இரண்டு மடிக்கணினிகள், 4 ஏசி கம்ப்ரஸர்கள், ஜெராக்ஸ் மிஷின், முக்கிய ஆவணங்கள், 15 கணினிகள் உள்ளிட்ட பல பொருட்கள் தீக்கிரையாகின. மேலும், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்திற்கு நேரில் ஆய்வினை மேற்கொண்டார். மேலும், இவ்விபத்து தொடர்பாக, நல்லிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதடையே மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேசமயம், அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது.