tamilnadu

img

அம்பேத்கர் சிலை உடைப்பு - 25 பேர் மீது வழக்கு பதிவு


வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னால் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் திருமணவிழா ஒன்றில் கலந்துகொள்ள தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பின் தலைவர் ஒருவர் வந்தபோது, இரு பிரிவினரிடையே போக்குவரத்தில் சிறு பிரச்னை ஏற்பட்டு முடிந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து நேற்று வேதாரண்யம் காவல்நிலையம் எதிரில் நடந்து வந்தவர்கள் மீது, ஒரு தரப்பினர் காரைவிட்டு மோதி ஆயுதங்களால் தாக்கியிருக்கிறார்கள் ஒரு தரப்பினர். இதில் ராமச்சந்திரன், முருகேசன் ஆகிய இருவர் காயமடைந்துள்ளனர். பதிலுக்கு அந்தக் காரை உடைத்து தீ வைத்து கொளுத்தியுள்ளனர் மற்ற தரப்பினர். அதைத் தீயணைப்புத்துறையினர் அணைத்துள்ளனர். அதற்குள் ஏற்கெனவே தேரோட்டத்துக்காக இடமாற்றம் செய்யக்கோரி, மறுக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை மற்றொரு தரப்பினர் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவம்  காவல் நிலையம் எதிரில்தான் நடைபெற்றது. காவல்நிலையமும் கல்வீசி தாக்கப்பட்டது. போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்
இந்தக் கலவரத்தில் காயம்பட்ட ராமச்சந்திரன், முருகேசன், பாண்டியராஜன், சரத்குமார் ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கும் மோதல் ஏற்பட்டு மருத்துவமனை கண்ணாடிகள், பைக்குகள் நொறுக்கப்பட்டன. உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த ராமச்சந்திரன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தரங்கம்பாடி அருகே அனுமதி இன்றி மக்களால் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை ஒன்று சுமார் ஒருவருடத்துக்கு முன்னர் அப்புறப்படுத்தப்பட்டு, அரசு சார்பில் பத்திரப்படுத்தப்பட்டு வந்தது. அந்தச் சிலை தற்போது உடைக்கப்பட்ட சிலைக்குப் பதிலாக அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ளது.
மேலும், இருதரப்பிலும் சுமார் 50 -க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேதாரண்யத்தில் பேருந்துகள் ஓடாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய முக்குலத்தோர் புலிகள் அமைப்பைச் சேர்ந்தோர் உள்ளிட்ட 25 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு  செய்துள்ளனர். 

இந்நிலையில் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது கண்டித்து இன்று காலை மீஞ்சூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியும் திரைப்பட இயக்குனருமான கோபி நயினார் உள்ளிட்ட பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.