தரங்கம்பாடி, மே 18- நாகை மாவட்டம், தலையுடைவர் கோவில்பத்து மற்றும் மருதம் பள்ளம் ஊராட்சிகளிலுள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களது சொந்த நிதியிலிருந்து மாணவர்களின் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்களை நிவாரணமாக வழங்கினர். தலையுடையவர் கோவில்பத்து ஊராட்சி, தலைச்சங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் கில்டா பிளாரன்ஸ், இந்துமதி சுப்பையன் இணைந்து மாணவர்களுடைய நிலையை அறிந்து அவர்களது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களையும் வரவழைத்து சொந்த நிதியிலிருந்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறிகள் மற்றும் 500 ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.
மருதம்பள்ளம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வி, ஆசிரியர்கள் சாந்தி, மணிமாறன் டேனியல், நேரு, ஜெசிந்தா ஆகியோர் இணைந்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் அரிசி, காய்கறி, மளிகைப்பொருட்களை நிவாரணமாக வழங்கினர். இரு பள்ளிகளை சேர்ந்த 400- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர். நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் சீர்காழி சமூக நலத் திட்ட வட்டாட்சியர் மலர்விழி மற்றும் தலைவர் உடையான்பத்து ஊராட்சி ரூபன்கரிகாலன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், மருதம்பள்ளம் ஊராட்சி தலைவர் சுமதி மதியழகன், துணைத்தலைவர் அழகுமலை கலந்து கொண்டனர்.