பள்ளி மாணவர்களுக்கு நோட்டு- புத்தகம் வழங்கல்
சீர்காழி, ஆக.17-நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) வி.கஜேந்திரன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கே.பி.செல்வமுத்து வரவேற்புரையாற்றினார். உதவி பொறியாளர்கள் ம.முத்துக்குமார், இரா.தாரா, ஜெ.அருமைநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு அட்டை, பேனா, நோட்டு புத்தகம் வழங்கினார். சிறப்பாக பணி புரிந்தமைக்காக ஊராட்சி ஒன்றிய ஓட்டுநர் ஆர்.ராஜசேகருக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது. செம்மங்குடி வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் செய.ராசமாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூராசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) பா.ரெஜினா ராணி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வசந்தி ஆகியோர் செய்தனர்.
புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கு
கரூர், ஆக.17- புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதை கண்டித்தும், அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டக் குழு சார்பில் கரூரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜ.ஜெயராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆ.மலைக்கொழுந்தன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஐ.ஜான்பாட்ஷா கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். அறிவியல் இயக்க மாநில தலைவர் என்.மணி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மு.மகாவிஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமைப்பு
தஞ்சாவூர், ஆக.17-இந்திய விடுதலை நாள் விழாவின் முக்கிய நிகழ்வாகவும், காந்தியின் 150ஆவது பிறந்த நாளை நினைவு கூறும் வகையிலும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கிய செந்திணை நண்பர்கள் என்ற அமைப்பை துணைவேந்தர் பாலசுப்ரமணியன் தொடங்கி வைத்தார். பதிவாளர் சின்னப்பன், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பல்கலைக்கழக வளாகத்தை தூய்மை செய்தனர்.
பேராவூரணி கல்லூரியில் புதிய படிப்பு தொடக்கம்
தஞ்சாவூர் ஆக,17- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-20 கல்வி ஆண்டிற்கான மூன்று புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. இது குறித்து கல்லூரி முதல்வர் எஸ்.இராணி தெரிவித்துள்ளதாவது, எம்.ஏ., தமிழ் இலக்கியம், பி.எஸ்.சி இயற்பியல், பி.எஸ்.சி வேதியியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் 2019-20 கல்வியாண்டில் தொடங்கப்பட உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் 19-ம் தேதி முதல் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்படும். பி.எஸ்.சி இயற்பியல் மற்றும் வேதியியலை விருப்பப் பாடமாக தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்கள் மேல்நிலை வகுப்பில் கணிதப் பாடத்தினை கட்டாயமாக பயின்று இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.