tamilnadu

img

எலும்பு முறிவு ஏற்பட்ட சிறுவனுக்கு சிகிச்சையளிக்காமல் தனியாருக்கு ஆள்பிடிக்கும் வேலையில் ஈடுபடும் அரசு மருத்துவமனை நிர்வாகம்.... உறவினர்கள், மார்க்சிஸ்ட் கட்சி சாலை மறியல்....

மயிலாடுதுறை:
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு முறையாக சிகிச்சை வழங்காமல், தனியார் மருத்துவமனைக்கு ஆள்பிடிக்கும் வேலையை செய்வதாக குற்றம்சாட்டி உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரைச் சேர்ந்த செல்வசாமி மகன் ஆகாஷ்(17) என்ற சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை தலைச்சங்காடு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்ந்து 3 நாட்கள் ஆனபோதும் அவருக்குமுறையாக சிகிச்சை அளிக்கா மலும், அறுவை சிகிச்சை செய்யாததோடு, மேல் சிகிச்சைக்கும் பரிந்துரைக்காமலும் மருத்துவமனை யிலேயே அலைக்கழித்ததாக கூறி ஆகாஷின் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் தலைமையில் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.எலும்பு முறிவு அல்லது அதிக செலவு செய்ய வேண்டிய ஆபத்தான நிலையில் வருபவர்களை வைத்து பணம் பறிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதிமுக மாவட்ட மருத்துவ அணியின் மாவட்டச் செயலாளரும்,  மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவருமான ராஜசேகரின், வைரம் மருத்துவமனை நிர்வாகமும் -அரசு மருத்துவமனையும் ரகசிய உடன்பாடு வைத்துக்கொண்டு ஆள்பிடிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருவதைப் போல சிறுவன் ஆகாஷையும் வைத்து பேச்சுவார்த்தை செய்ததாக கூறப்படு கிறது.

சிறுவனின் பெற்றோர்கள் மறுக்கவே எந்தவித சிகிச்சையும் அளிக்காமல் அலட்சியம் செய்திருக்கின்றனர். 3 நாட்களாக எந்தவித சிகிச்சையும் அளிக்காதது குறித்து விளக்கம் கேட்க தலைமை மருத்துவர் ராஜசேகருக்கு போன் செய்தால், போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாம். உடனடியாக ஆகாஷை மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்க வலியுறுத்தி நடைபெற்ற சாலை மறியலைஅறிந்த, மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாத்துரை தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, 
சிறுவனை தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல அனுமதித்த பிறகே போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வரும் ஏழை,எளிய மக்களின் நிலையை அறிய இதுபோன்ற சம்பவங்களே சாட்சி.

;