tamilnadu

img

போக்குவரத்து கழகங்களை பாதுகாத்து தொழிலாளர் நலனை பேண அரசு முன்வருமா?

கடந்த 2014-சூம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவினை தாக்கல் செய்து, பொதுப்போக்குவரத்தை சீரழிக்க நடவடிக்கையினை மேற்கொண்டது. அகில இந்திய சாலைப் போக்குவரத்து சம்மேளனம் (AIRTWF) சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகள் ஒன்று திரண்டு, நாடு முழுவதும் பல்வேறு இயக்கங்களை கண்டதுடன் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி அம்மசோதாவினை நிறுத்தி வைக்கும் நிலையினை உருவாக்கியது. 

மோட்டார் வாகன சட்டம் - 1988-ல், 82 திருத்தங்களை செய்து தனக்குள்ள மெஜாரிட்டியை பயன்படுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றி சட்டமாக இயற்றப்பட்டுள்ளது.பொதுப் போக்குவரத்து சேவைத்துறையில் பயணிகள் வாகனங்கள், சரக்கு வாகனங்களான லாரி, கனரக வாகனங்கள், டூரிஸ்ட் டாக்சி, கால் டாக்சி, மேக்சிகேப் வாகனங்கள், சிறிய சரக்கு வாகனங்கள், ஆட்டோ உட்பட அனைத்தும் “சுயவேலை வாய்ப்பு” என்ற அடிப்படையில் பெரும்பாலும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வாகனங்களை வாங்கி இயக்கி குடும்ப வாழ்க்கையை தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர். 

அரசு போக்குவரத்து கழகங்களில் - இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக போக்குவரத்து சேவையினை செய்து வருகின்றது. பல நிறை குறைகள் இருந்த போதிலும் போக்குவரத்து கழகங்களின் மூலம் மக்களின் பயணத் தேவையை தொழிலாளர்கள் பூர்த்தி செய்து கொடுக்கின்றனர். மேலும் கழக நிர்வாகங்கள் பல்வேறு விருதுகளையும் பெற்று சிறப்பாக சேவை செய்து வருகின்றன.   

கொரோனோதொற்றையொட்டி 
ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மாஸ்க், கையுறை,சானிடைசர், கை கழுவ சோப்பு, வெப்பநிலை பரிசோதனை போன்றைவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும், அதே போன்று பேருந்துகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும், பயணிகளை ஸ்கேனர் மூலம்பரிசோதித்து பேருந்துகளில் ஏற்றவேண்டும் என்ற முதல்வரின் அறிவிப்புகளை அனைத்து தொலைக்காட்சிகளிலும் வெளியிட்டு, மறுநாள் காலையில் மேற்கண்ட அனைத்து செயல்பாடுகளையும் கழக நிர்வாகங்கள் மேற்கொள்ளும் விதத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டவாரியாக தொலைக்காட்சியில் காண்பித்தார்கள். இந்நடவடிக்கைகள் போக்குவரத்துக் கழகங்களில் ஓரிரு நாட்களில் நடந்ததோடு சரி. 

தொழிலாளர்களின் ஊதியம் 
அரசு உத்தரவிற்கிணங்க 2020 மார்ச், ஏப்ரல் மாத ஊதியம் முறையாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. மே மாதம் முதல் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற போது, கழக நிர்வாகங்கள் தான்தோன்றித்தனமான முறையில் இருக்கும் விடுப்பை எடுத்துபோட்டு, முந்தைய மாதங்களில் ஊதியம் பெற்ற சராசரியினை கணக்கிட்டு சம்பளம் இல்லா விடுப்பு என்ற விதங்களில் கணக்கிட்டு பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைத்தும் வழங்கும் நிலையினை கழக நிர்வாகங்கள் உருவாக்கி உள்ளன. 

பேருந்து இயக்கம் 
செப்டம்பர் முதல் தேதியிலிருந்து பேருந்து இயக்கம் தொடங்கிய போதிலும் முழுமையாக இயக்கப்படவில்லை. சென்னையில் 60 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. மாவட்ட பகுதியில் 40 சதவீதமும், கிராமம் மற்றும்ஊரகப் பகுதிகளில் 30 சதவீதத்திற்கும் குறைவாகவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக தொழிலாளர்கள் முறையாக பணிக்கு வந்தும் பணி கிடைக்காமல் திரும்பிச் செல்கின்றனர். ஆனால் அவர்களது ஊதியத்தில் பிடித்தம் செய்துள்ளனர். இது போன்று பல்வேறு குளறுபடிகளை கழக நிர்வாகங்கள் செய்து வருகின்றன. 

அரசின் தலையீடு கோரி 
2020 மே மாதம் முதல் சம்பளத்தில் செய்யப்பட்ட குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். பணிக்கு வந்து பணி வழங்கப்படாத அனைவருக்கும் அட்டெனென்ஸ் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர் அனுமதியின்றி விடுப்பு எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். சுழற்சி முறையில் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் போன்றவற்றில் தமிழக அரசும் போக்குவரத்து கழக நிர்வாகங்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து இயக்கத்திற்கான அரசு நிலையான வழிகாட்டுநடைமுறைகளை (அரசின் கடித எண். 133 / CH5 / CHO / 2020 நாள் 31.08.2020) உருவாக்கி உள்ளது. அதன்படிதொழிலாளர் மற்றும் பயணிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பயணம் செய்வதுடன் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். 

கழக நிர்வாகங்கள் அரசின் அறிவிப்பின்படி முழுமையாக பேருந்துகளை இயக்கவில்லை. அரசின் விதிமுறைகளையும் அமலாக்கவில்லை. மாநிலம் முழுவதும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக கூட்டம் அதிகமான காலை, மாலை வேளைகளில் கொள்ளளவிற்கும் அதிகமான பயணிகள் ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் அரசின் விதிமுறைகளை பற்றி எவ்வித கவலையும்பட்டதாகத் தெரியவில்லை. நோய்த் தொற்று பற்றியும் அக்கறையில்லை. சாதாரண காலத்தில் கேட்பது போல் கலெக்சன் எங்கே? டீசல் எங்கே? என ஓட்டுநர், நடத்துநரிடம் கேட்கும் நிலை உள்ளது. 

வருவாய் இழப்பு 
பேருந்துகளை முழுமையாக இயக்க அரசும், கழகநிர்வாகங்களும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட (மார்ச் 24-ஆம் தேதி முதல்) 6 மாத காலம் பேருந்து இயங்காத நிலையில் சாலை வரி செலுத்தாமல் நூற்றுக்கணக்கான பேருந்துகள் அந்தந்த கழக மட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே டீசல் வாங்கியதற்கு முழுமையாக பணம் செலுத்தாத நிலையும் உள்ளது. குறைந்த பயணிகளுடன் பேருந்தை இயக்குவதால் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

நிர்வாகச் செயல்பாடு
இவற்றுகெல்லாம் அரசிடம் நிதி கேட்க வேண்டும். சிஐடியு, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் இயக்கம் நடத்துவதோடு தமிழக அரசிடம் நிதி கேட்டு கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் கழக அதிகாரிகளுக்கு இந்த சிந்தனையே மனதில் கூட தோன்றவில்லை. தொழிலாளர்களின் உரிமைகளை, சலுகைகளை பறித்து கழகங்களின் இழப்பை ஈடுகட்டவே நிர்வாகங்கள் நினைக்கின்றன. சேவைத்துறைகளுக்கு உதவ வேண்டும் என்ற அரசின் பொறுப்பை உணராமல் செய்ததில், கழக அதிகாரிகளுக்கு கடந்த 10, 12 ஆண்டுகளாக மிகப் பெரிய பங்குஉண்டு. தொழிலாளர்களின் வலுவான ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம், கழகங்களுக்கு அரசு முழு உதவி அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. 

மோட்டார் வாகன சட்டத்திருத்தம் 
மோட்டார் வாகன சட்டம் 1988-ல் “பிரிவு - 6” மாநிலபோக்குவரத்து நிறுவனங்களுக்கான சிறப்புப் பிரிவாகும்.இந்தப் பிரிவின்படி குறிப்பிட்ட பகுதி அல்லது வழித்தடத்தில் அரசு போக்குவரத்து இயங்கும் என முடிவு செய்துஅரசாணை பிறப்பிக்கப்பட்டுவிட்டால், அதில் எந்த தனியாரும் பேருந்தை இயக்க முடியாது. மேற்கண்ட சட்டத்தின்படி தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் சுமார்6,000 தனியார் பேருந்துகளை தவிர அனைத்து வழித்தடங்களும் தேசிய மயமாக்கப்பட்ட வழித்தடங்களாகும்.தேசிய மயமாக்கப்பட்ட வழித்தடங்களில் பர்மிட் வழங்குவதற்குரிய விதிதான், மோட்டார் வாகன சட்டத்தினை ஒட்டிய விதி எண். 288 ஆகும். மத்திய அரசு கடந்த ஆண்டுகடும் எதிர்ப்புகளையும் மீறி, மோட்டார் வாகன சட்டம்1988-ல் பல்வேறு திருத்தங்களை செய்து பெருமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் சாதகமாக கொண்டு வந்து அமலாக்கி உள்ளது. பிஜேபி அரசுக்கு ஆதரவான நிலை இருக்கும் சூழலிலேயே தமிழக அரசு 288 (A) என்ற புதிய விதியினை உருவாக்கி உள்ளது. இந்த புதிய விதியின்படி போக்குவரத்து கழகங்கள் அவசர தேவைக்காக தனியார் பேருந்துகள் வாடகைக்கு இயக்கி கொள்ளலாம். அவ்வாறு வாடகைக்கு எடுக்கும் பேருந்துகளுக்கு கழகங்களின் பர்மிட் வழங்க இந்த சட்டத்திருத்தம் வழி வகுக்கிறது.

அரசின் செயல்பாட்டால் 
2015-2016ன் படி தமிழகத்தில் 23,078 பேருந்துகள் மக்களின் பயணத்தேவைக்கு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்பட்டு வந்தது. தற்போது 2020 ஜனவரி கணக்கின்படி 20,944 பேருந்துகள் மட்டுமே உள்ளன. 2,134 பேருந்துகள் குறைக்கப்பட்டதானது மத்திய-மாநில அரசுகளின் தவறான கொள்கைகளின் வெளிப்பாடே ஆகும். மக்களின் பயன்பாட்டிற்கு 19.496 பேருந்துகள் 2020 ஜனவரி மாதத்திலிருந்து இயக்கும் நிலையே கழக மட்டங்களில் உள்ளது. குறிப்பாக மாநகர் போக்குவரத்தில் ஊரடங்கு காலத்திற்கு முன்பு நாளொன்றுக்கு சராசரி 45 லட்சம் மக்கள் பயணம் மேற்கொண்டனர். ஊரடங்கு கால தளர்வுகளுக்கு பின் சுமார் 16, 17 லட்சம் பயணிகளே சென்னை மாநகர் பேருந்தில் பயணம் செய்யும் நிலை உள்ளது.
ஓய்வு பெற்றோர் 

கொரோனா காலத்தில் அரசு 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து ஓராண்டிற்கு ரிட்டையர்மெண்ட் இல்லை என்று உத்தரவிட்ட நிலையில் போக்குவரத்துக் கழகங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. தற்போதைய நிலையில் 83,331 தொழிலாளர்கள் ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கும் பஞ்சப்படி உயர்வு தொகையினை நவம்பர் 2015 முதல் 59 மாதங்களாக வழங்காமல் காலம் கடத்தி வருகிறது. இதையொட்டிய தொழிலாளர்களுக்கு சாதகமான உயர் நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்கவில்லை. மேலும் பணியில் இருக்கும் போது குடும்ப நலநிதிக்காக சம்பளத்தில் மாதந்தோறும் ரூ.150 பிடித்தம் செய்யப்படுகிறது. இறந்த தொழிலாளர்களுக்கு 04.02.2019 முதல் ரூ.3 லட்சம் கிடைக்க வேண்டிய நிதி சுமார் 200 பேருக்கு மேல் வழங்காமல் இருக்கும் அவல நிலையும் தொடர்கிறது.மார்ச் 2020 கணக்கின்படி வருங்கால வைப்பு (PF) ரூ.447.70 கோடி கிராஜுவிட்டி, ரூ.491.23 கோடி, கமுட்டேசன் ரூ.401.79 கோடி, லீவு சரண்டர் ரூ.284.06 கோடி என்ற வகையில் ரூ.1624.78 கோடி அளவிற்கு குறிப்பிட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்காமல் கழக நிர்வாகங்கள் நிலுவை வைத்துள்ளன.ஓய்வு பெற்ற நல அமைப்பின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்துவதோடு, வழக்கு தொடுத்தும் ரோட்டி
லும், கோர்ட்டிலும் போராடும் சூழ்நிலை உள்ளது. 

சேவைத்துறை 
கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள வருமான இழப்பைஅரசு நிதி உதவி செய்து போக்குவரத்து கழகங்களில் நிலைநிறுத்த முன்வரவேண்டும். போக்குவரத்து கழகங்கள் சேவைத்துறை என்பதனை கணக்கில் எடுத்து வரவுக்கும் செலவிற்குமான வித்தியாச தொகையை ஆண்டுதோறும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி பொதுத்துறையான போக்குவரத்து கழகங்களை பலப்படுத்த வேண்டும். 17.11.1999 தேதிய அரசு உத்தரவின்படி தமிழகத்தில் 25,716 பேருந்துகள் இயக்க தகுதி உள்ளவை. 1991-ல் அரசு போட்ட உத்தரவின்படி, ஒரு புதிய பேருந்து வாங்கினால் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ இயக்கினால் அந்த பேருந்து வழித்தடத்தில் இயக்க தகுதியற்றதாகும். தற்போதைய நிலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் மாநிலம் முழுவதும் மாற்றப்பட வேண்டும். எப்போது கேட்டாலும் கழக நிர்வாகங்கள் நிதி இல்லை நிதிஇல்லை என்று கூறி வரும் சூழலில், சமீபத்தில் உருவாக்கப்பட்ட 288(A) விதியின்படி பேருந்துகளை வாடகைக்கு எடுத்துஇயக்க அரசு செயல்பட நினைக்கிறதோ என்று கருத வேண்டியுள்ளது.

சமீபத்தில் மின்வாரியத்தை தனியாரிடம் தாரை வார்க்க உத்தரபிரதேச பாஜக அரசு முடிவு எடுத்திருந்த நிலையில், அங்குள்ள மின்ஊழியர்களின் ஒன்றுபட்ட வேலை நிறுத்த போராட்டத்தால், தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை மாநில பிஜேபி அரசு ரத்து செய்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களும் கடந்த காலங்களில் தமிழக அரசினுடைய தவறான கொள்கைகளுக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்தி உள்ளோம் என்பதை மறந்து விடலாகாது. கொரோனா காலத்தை கணக்கில் கொண்டு, 
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களும் விரைவில் மேற்கண்ட பிரச்சனைகளை தீர்க்க முன் வரவேண்டும். முன்வராவிட்டால் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க வித்தியாசமின்றி ஒன்றுபட்டு போராட தயாராவோம்!..

கட்டுரையாளர் :ஏ.பி.அன்பழகன், துணைத்தலைவர். அகில இந்திய சாலை போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளனம்