திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சிங்காரத்தோப்பு பகுதியில் ஒரு சிறிய அறையில் செயல்பட்டு வந்தது. ஒருநாள் மாலை நேரம். தனது அரசு அலுவலகப் பணியை முடித்துவிட்டு, தோழர் கே.வி. கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.கட்சி அலுவலகத்தில் இருந்த பழைய டைப்ரைட்டர் மிஷின் பல நாள் இயங்காமல் இருந்தது.அதை தோழர் கே.வி. சரிபார்த்து புதிய ரோலர் வாங்கி வந்து மாற்றி, அதை இயங்க வைத்தார். தினசரி அலுவலக பணி முடிந்த பிறகு, கட்சி அலுவலகத்திற்கு வந்து ஏதேனும் உதவிகள் செய்வார்.
1971-ல் நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் தோழர் கே.அனந்தநம்பியார் போட்டியிட்டார். கட்சி தனித்து நின்றது. கட்சிக்குமிகப்பெரிய வேலைப்பளு. அப்போது மாவட்டச்செயலாளராக இருந்த தோழர் பி.ராமச்சந்திரனுக்கு தோழர் கே.வி. பக்கபலமாக இருந்து செயல்பட்டார். அரசு வேலைக்கு மட்டம் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விளம்பரத் தட்டி வைப்பது, சுவர் எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற பணிகள் இரவு முழுவதும் கே.வி. மேற்பார்வையில் உற்சாகத்துடன் நடக்கும். தோழர்களை அன்புடன் அரவணைத்து, அவர்களோடு இணைந்து பணியாற்றுவதில் கே.வி. வல்லவர்.
கணிசமாக ஊதியம் கிடைத்த அரசுப் பணியை துச்சமென துறந்தார். கட்சிப் பணிக்கு மலர்ந்த முகத்துடன் வந்தார். அவர் கட்சியில் பணியாற்றிய காலத்தில் கட்சியிலிருந்து பெரிய உதவி எதுவும் கிடைக்காது. ஒரு பழைய அச்சு இயந்திரம் அவர் கைக்கு வந்தது. கட்சிப் பணி இல்லாத நேரத்தில் அச்சகப் பணியை பார்ப்பார். காலால் மிதிக்கும் ‘டிரெடில்’ இயந்திரத்தை அவர் புன்முறுவலுடன் இயக்குவார். கடினமான பணிகளை செய்யும்போதும் அவரது முகத்தில் சோர்வின் சாயலை காண முடியாது. கட்சி வேலை அதிகரித்ததும் அச்சக வேலைக்கு விடை கொடுத்தார். பல நாட்கள் கட்சி அலுவலகத்தில்தான் படுத்து உறங்குவார். கிழிந்த பாய், தலையணைக்கு பழைய பேப்பர் கட்டு. கட்சி அலுவலகத்தில் இதுவே அவரது சொத்து.
ஸ்ரீரங்கத்தில் அவர் குடியிருப்பை தேடிஅதிகாலை நேரத்திலேயே துப்புரவுப் பணியாளர்கள் சிலர் வந்து விடுவார்கள். அவர்களது கோரிக்கைகளுக்காக நகர்மன்ற அலுவலகம் முன்பு பல போராட்டங்களை நடத்தி கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளார். 1973- ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் அதிமுக போட்டியிட்டது. தேர்தல் களப் பணியில் கே.வி. அவர்களுடன் பிரச்சாரப் பணியில் ஈடுபடும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
அவசர நிலை காலம் முடிந்தபிறகு, 1977-ல் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் தோழர்பி.ராமமூர்த்தி போட்டியிட்டார். தேர்தல் களப்பணியில் மேலூர் தொகுதிக்கு கே.வி. பொறுப்பேற்றார். காலை குளியல் வயல் புறத்தில் உள்ள பம்ப்செட், உணவு சாலையோர இட்லிக் கடை, இரவு தேர்தல் அலுவலகத்தில் சிறிது நேர உறக்கம். அயராத உழைப்புக்கு அவர் ஒரு உதாரணம்.தீபாவளி பண்டிகை நேரத்தில் கட்சி ஊழியர்களுக்கு உதவ ஒரு புதுமையான வழியை கண்டுபிடித்தார். பண்டிகை நாளின் நடு இரவு வரை, கடைவீதிகள் அல்லோலப்படும்.திருச்சி பெரிய கடை வீதி அருகில் கே.வி. நின்றுவிடுவார். காலிபைகளுடன் அவர் அருகில் நாங்கள் நிற்போம். தொழிலாளர்களும் கட்சி ஆதரவாளர்களும் கே.வி.யை கண்டதும் நலம்விசாரிப்பார்கள். அவர்கள் வாங்கி வரும் வேட்டி,சேலை, துண்டு ஏதேனும் ஒரு பொருளை இன்முகத்துடன் அவரிடம் தருவார்கள். மறுநாள், மாவட்டச் செயலாளர் பி.ராமச்சந்திரனிடம் இந்தப் பைகளை கே.வி. ஒப்படைத்து, ஒரு மெல்லிய புன்னகையோடு விடைபெறுவார்.
பொன்மலை பணிமனையிலிருந்து டிஆர்இயு சங்கத்தின் முன்னணி ஊழியர் தாமஸ்பணி ஓய்வு பெற்றார். அப்போது, பணிமனையின் பிரதான வாயிலில் யானை ஒன்று அவருக்குமாலையிட்டு வரவேற்றது. தோழர் தாமஸ் யானை மீது அமர வைக்கப்பட்டு, சங்க திடலுக்குஅழைத்து வரப்பட்டார். அந்த யானையை ஏற்பாடு செய்தவர் தோழர் கே.வி. இப்படி ஒவ்வொரு பணியிலும் ஒரு அதிசய முத்திரையைப் பதிப்பார். தோழர்களை ஆச்சரியப்பட வைப்பார்.
1977-ல் பொன்மலையில் டிஆர்இயு தொழிற்சங்க மாநாடு. இளையராஜா இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையிலிருந்து இசைக்குழுவை அழைத்து வந்தால், அதிக செலவாகும் என்பதால் திருச்சியிலேயே இசைக்குழுவை ஏற்பாடு செய்யுமாறு இளையராஜா கூறினார். நொடிப் பொழுதில் இசைக்குழுவை ஏற்பாடு செய்த பெருமை கே.வி.யை சாரும். அதன்பிறகு, திருச்சியில் இளையராஜா கலை நிகழ்ச்சிகள், கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் நாடகம் என கலை-இலக்கிய நிகழ்ச்சிகளால் திருச்சி அமர்க்களப்பட்டது.
அவசர நிலை காலம் முடிந்தபிறகு, திருச்சியில் சோசலிஸ்ட் இளைஞர் முன்னணி மாவட்ட மாநாடு தேவர் மன்றத்தில் நடைபெற்றது. அந்தமாநாட்டில்தான் ‘இளைஞர் முழக்கம்’ இதழ் அழகிய வடிவில் வெளியிடப்பட்டது. மாநாட்டில், கே.வி. மேற்பார்வையில் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. ரேடியோ பாலன், கே.வி.எஸ்இந்துராஜ், கோபிநாத்(தோழர் பி.ஆர். ராமச்சந்திரனின் மூத்த மகன்), நான் உட்பட அதில் நடிகர்கள். தோழர்கள் மைதிலி சிவராமன், கே.சி.கருணாகரன் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்கள்.
கட்சியின் பன்முகப் பணிகளிலும் வித்தகராக திகழ்ந்தவர் கே.வி. கட்சிப் பணிகளை மகிழ்ச்சிக்குரிய பணியாக மாற்றுவதில் வல்லவர். எவரையும் பார்த்த மாத்திரத்தில் வசீகரிக்கக் கூடிய அபார சக்தி அவரிடம் இருந்தது.அலுவலகத்திலோ அல்லது பொது இடத்திலோ சந்திக்கும் தோழர்களிடம் முதலில் அவர்களது குடும்ப நலனை அன்புடன் விசாரிப்பார். தோழர்களின் குடும்பத்தினரின் மருத்துவம், கல்வி குறித்து கேட்டறிந்து உரிய உதவிகளை செய்வார். பல தோழர்கள் கே.வி.யை தங்களது குடும்பத்தில் ஒருவராகவே கருதினர்.
தோழர் கே.வி. அவர்களின் மகன் பாஸ்கரன், திருமண நிகழ்ச்சியில் தோழர் என்.சங்கரய்யா பங்கேற்றார். தோழர் கே.வி. குடும்பத்தில் ஒரு பட்டாளமே கட்சியில் இணைந்து செயல்படுவதை தோழர் சங்கரய்யா பெருமையுடன் குறிப்பிட்டார். அந்த பெருமைக்குரிய தோழர் கே.வி. தனது அரிய குணங்களாலும் நற்பண்புகளாலும் பல அற்புதமான தோழர்களை உருவாக்கித் தந்து நம்மிடமிருந்து பிரியா விடை பெற்றுள்ளார்.
====வி.பரமேசுவரன்===