தேனி:
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ .பாஸ்கரன் தாக்கப்பட்ட சம்பவத்தில் 200 பேர் மீது கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியது உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த 350 காவல்துறையின்ர உட்பட 600 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் மற்றும் சருத்துப்பட்டி கிராம மக்களிடையே பிரச்னை இருந்து வந்தது. இதற்காக கடந்த வாரம் இருபிரிவினரும் தனித்தனியே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் சிரஞ்சீவி என்பவரை லட்சுமிபுரத்தை சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது .இதனால் சருத்துப்பட்டி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தேனி பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட கவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தேவதானப்பட்டியில் இருந்து தேனிக்கு வந்து கொண்டிருந்தார். மறியல் நடைபெறுவதை அறிந்து விசாரணையில் இறங்கினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த சிலர் அவர் மீது கற்களை வீசினர். இதில் அவரது இடது புருவம், கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் இருந்த ஆயுதப்படை காவலர் அன்பழகன், பட்டாலியன் காவலர் சக்திவேல், சவுந்திரவேல், முத்தீஸ்வரன், ராஜீவ்குமார் உள்ளிட்ட பத்து பேரும் காயமடைந்தனர்.
காவல் கண்காணிப்பாளர் தாக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் பாதுகாப்பிற்கு கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு மதுரை காவல் ஆணையர் டேவிட்சன், திண்டுக்கல் சரக டிஐஜி.ஜோஷிநிர்மல்குமார், திண்டுக்கல், மதுரை காவல் கண்காணிப்பாளர்கள் சக்திவேல், மணிவண்ணன் ஆகியோர் விரைந்தனர்.
பெரியகுளம் வட்டாட்சியர் சுந்தர்லால் புகாரின் பேரில் இப்பகுதியைச் சேர்ந்த 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 147(அதிகமாகக் கூடுதல்), 148 (ஆயுதம் வைத்திருத்தல்), 323 (கைகளால் தாக்குதல்), 427 (பொதுச் சொத்திற்கு சேதம் ஏற்படுத்துதல்), 353 (அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், 332 (பீதி ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பத்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்களை, திண்டுக்கல், மதுரை, விருதுநகரில் இருந்து 350 காவல்துறையினரும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 250 காவல்துறையினரும் தற்போது இந்த ஊர்களின் 15 இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.காயம்பட்ட காவல் கண்காணிப்பாளர்.பாஸ்கரனிற்கு நரம்பில் வெட்டுப்பட்டு தொடர்ந்து ரத்தம் வெளியேறியதால் மதுரை அரவிந்த் கண் மருத்துவமைனையில் மேற்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தேனியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். காயம்பட்ட மற்ற காவல்துறையினர் க.விலக்கு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்கப்பட்டதாகக் கூறப்படும் காவலர் சிரஞ்சீவி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவலர் சிரஞ்சீவியை தாக்கியதாக லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ், முரளி, கார்த்திக், சுகுமார், செந்தில் ஆகியோர் மீது தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர் .
டிஐஜி பேட்டி
இது குறித்து திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் ஜோஷி நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேவதானப்பட்டி காவலர் சிரஞ்சீவி வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்ததில் சிலர் தாக்கியதாக சொல்லிவிட்டதன் விளைவாக மறியல் நடந்துள்ளது .இப்போது கட்டுக்குள் வந்துவிட்டது. 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.